Published : 30 Jul 2019 10:35 AM
Last Updated : 30 Jul 2019 10:35 AM

இடநெருக்கடியில் மதுரை மாவட்ட மைய நூலகம்: குடோன் இல்லாததால் நடைபாதைகளில் கிடக்கும் புத்தகங்கள்

மதுரை மாவட்ட மைய நூலகத்தில் புத்தகங்களை வைக்க குடோன் இல்லாததால் புத்தகங்கள் வாசகர்கள் அமர்ந்து படிக்கும் இடங்களிலும், நடைபாதைகளிலும் போடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பொது நூலக இயக்ககம் கீழ் மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் இயங்கி வருகின்றன. 
மதுரை மாவட்டத்தில் மாவட்ட மைய நூலகம், கிளை நூலகம் கிராமப்புற நூலகம் உள்பட 133 நூலகங்கள் உள்ளன. இதில், மாவட்ட மைய நூலகம் மதுரை சிம்மக்கல்லில் உள்ளது. இந்த நூலகத்தில் லட்சக் கணக்கான புத்தகங்கள் வாசகர்கள் வாசிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்திற்கு ஒரு நாளைக்கு 1,000 வாசகர்கள் படிக்க வருகின்றனர். 

இவர்களுக்கான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் வாசகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மிகக் குறுகலான இடத்திலே மாவட்ட மைய அலுவலகம் செயல்படுவதால் வாசகர்கள் படிக்கும் படிப்பகவும், மற்ற சிறப்பு நூலகங்களும் இடநெருக்கடியிலே செயல்படுகின்றன.

இந்நிலையில் இந்த நூலகத்தின் முதல் தளத்தில் செயல்பட்ட குடோன், தற்போது நாட்டுப்புற நூலகம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 
சுமார் 4,000 சதுர அடியில் அமைந்துள்ள இடத்தில் தற்போது நாட்டுப்புற நூலகம் அமைக்கும் பணிகள் நடக்கிறது. 
பொதுவாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கான புத்தகங்களும், மாவட்ட மைய நூலகத்திற்குதான் வரும். அவை, முதல் தளத்தில் உள்ள குடோனில் வைக்கப்படும். அங்கு ஊழியர்கள் அதை தனித்தனியாக பிரித்து, ஒவ்வொரு நூலகத்திற்கு தனித்தனிக்கட்டாக அனுப்புவார்கள். 

ஆனால், தற்போது குடோன் இல்லாததால் 500 பதிப்பகங்களில் வந்த புத்தகங்கள், வைக்க குடோன் இல்லாமல் நூலகத்தின் மையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. 

அதனால், நூலகத்திற்கு வரும் வாசகர்கள் படிக்க இடமில்லாமல் முதல் தளத்திற்கு செல்லும் படிகள், முதல் தள வரண்டாவில் பாய் விரித்து படிக்கின்றனர். 

மாவட்ட மைய நூலகத்தில் இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்பு நடந்தது. தற்போது இடமில்லாமல் அந்த பயிற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதுபோல், வாசகர் வட்டமும் மாதத்திற்கு ஒரு முறையாவது கூட்ட வேண்டும். ஆனால், இடமில்லாததால் 6 மாதமாக வாசகர் வட்டம் கூட்டப்படாமல் உள்ளது. 

புத்தகங்களை வைக்கவும், வாசகர்கள் படிக்கவும் வசதியில்லாமல் மாவட்ட மைய நூலகத்தின் செயல்பாடுகள் முடங்கிப்போய் உள்ளது. 
இதுகுறித்து நூலக ஊழியர்கள் கூறுகையில், "குடோன் இல்லாததால் புத்தகங்களை வைக்க இடமில்லாததால் அலுவலக வளாகத்தில் அடுக்கி வைத்துள்ளோம். இந்த புத்தகங்களை தனித்தனியாக பிரித்து அனைத்து நூலகத்திற்கும் அனுப்பி வைக்கும் வரை புத்தகங்கள் நூலகத்தின் மையத்திலே வைக்கப்படுகிறது. 

அதனால், நூலகத்திற்கு வரும் வாசகர்கள் அமர்ந்து படிக்க வசதியில்லை. அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ் பயிற்சி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். வாசகர்கள் அனைவரும் தங்கள் வாகனங்களையும் நிறுத்தி வைக்க வளாகத்தில் இடமில்லை. அதனால், வெளியே சாலையோரங்களில் நிறுத்தி விட்டுதான் நூலகத்திற்கு வருகின்றனர். இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நூலகத்தில் வாசகர்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் உள்ளது. அதனால், கூடுதல் கட்டிட வசதி அல்லது விசாலமான இடத்திற்கு நூலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்" என்றார். 

33 பேர் பணிபுரிந்த இடத்தில் 3 பேர்..

முன்பு இதே மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட மைய நூலகர் உள்பட 33 பேர் பணிபுரிந்தனர். ஆனால், தற்போது மாவட்ட மைய நூலகர், ஒரு கிரேடு-2 ஊழியர், ஒரு கிரேடு-3 ஊழியர் ஆகிய மூவர் மட்டுமே பணிபுரிகிறார்கள். 

அதனால், வருகிற வாசகர்களையும், மற்ற சிறப்பு பிரிவுகளின் அன்றாட செயல்பாடுகளையும் கண்காணிக்க முடியவில்லை. நூலகத்தில் புத்தகங்கள் காணாமல் போனால் அதற்கு ஊழியர்கள்தான் பொறுப்பு. தற்போது புதிய நூலகப்பிரிவுகள் தொடங்கப்படுகிறது. அதற்கு கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படாததால் பெயரளவுக்கு நூலகம் செயல்படும் அவலம் ஏற்பட்டு்ளளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x