

சென்னை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜூம், துணைத் தலைவராக வழக்கறிஞர் வி.கார்த்திக்கேயனும், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 25 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 198 வழக்கறிஞர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் போட்டியிட்ட பி.எஸ்.அமல்ராஜ், ஆர்.சி.பால்கனகராஜ், எஸ்.பிரபாகரன், ஆர்.விடுதலை, கே.பாலு, ஜி.மோகன கிருஷ்ணன், வி.கார்த்திக்கேயன், எம்.வேல் முருகன், டி.செல்வம், ஆர்.சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 25 பேர் பார் கவுன்சில் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவர், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு, தேர்தல் அதிகாரியான பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமார் முன்னிலையில் நேற்று தேர்தல் நடந்தது. உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சி.காண்ட்பால் தேர்தல் பார்வை
யாளராக பங்கேற்றார்.
இந்த தேர்தலில் பார் கவுன்சில் தலைவர் பதவிக்கு பி.எஸ்.அமல் ராஜூம், ஆர்.சி.பால்கனகராஜூம் போட்டியிட்டனர். இதில் பி.எஸ்.அமல்ராஜ் வெற்றி பெற்றார். இதேபோல துணைத் தலைவர் பதவிக்கு வி.கார்த்திக்கேயன், எம்.வேல்முருகன், ஆர்.சிவசுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் வி.கார்த்திக்கேயன் வெற்றி பெற்றார்.
மேலும் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு எஸ்.பிரபாகரனும், டி.செல்வமும் போட்டியிட்டனர். இதில் எஸ்.பிரபாகரன் மீண்டும் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணும் பங்கேற்று வாக்களித்தார்.
இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியான சி.ராஜகுமார் கூறும்போது, “இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விவரம் அகில இந்திய பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து முறைப்படி அறிவிப்பு வந்தபிறகு அரசிதழில் வெளியிடப்பட்டு அதன்பிறகு புதிதாக தேர்ந்தெடுக்
கப்பட்டவர்கள் பார் கவுன்சில் நிர்வாகிகளாக பொறுப்பேற்பர்” என்றார்.