Published : 29 Jul 2019 06:22 PM
Last Updated : 29 Jul 2019 06:22 PM

ஆணவக் கொலைகளைத் தடுக்க எடுத்த நடவடிக்கை: தமிழக அரசு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி

சென்னை

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க எடுத்த நடவடிக்கை தொடர்பான தமிழக அரசின் அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஆணவக் கொலைகள் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அமர்வு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

அப்போது, ஆணவக் கொலைகளைத் தடுப்பது மற்றும் தீர்வு காண்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆணவக் கொலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக நலத்துறையின் கீழ் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் 1300 காவல் நிலையங்கள் இருப்பதாகவும், அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்புப் பிரிவு அமைப்பது என்பது சாத்தியமில்லாதது எனவும் தெரிவித்தனர்.

ஆணவக் கொலைகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு துண்டுப் பிரசுரம் கூட வெளியிடப்படவில்லை எனக் குறை கூறிய நீதிபதிகள், வழக்கு தொடர்பாக அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தல்கள் வழங்க உதவியாளரை அனுப்பி வைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர், இந்த அறிக்கையை தாக்கல் செய்த உதவி ஐஜியை, நாளை நேரில் ஆஜராக  உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்குத்  தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x