Published : 29 Jul 2019 12:58 PM
Last Updated : 29 Jul 2019 12:58 PM

கொடைக்கானல் மலையில் 4 புலிகள்: ஆர்டிஐ தகவலில் உறுதி செய்த தமிழக வனத்துறை

கொடைக்கானல் மலையில் புலிகள், சிறுத்தைகள் உள்பட 20 வகை வன விலங்குகள் இருப்பதாகக் கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டு இருபப்தாகவும், அதில் புலிகள் எண்ணிக்கை 4 அக அதிகரித்து இருப்பதாகவும் ஆர்டிஐ தகவலில் தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. 

மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள முக்கிய கோடை வாசஸ்தலம் கொடைக்கானல். சர்வதேச சுற்றுத்தலமான கொடைக்கானலுக்கு ஆண்டுக்கு 45 லட்சம் சுற்றுலாப்பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்து செல்கின்றனர்.

கொடைக்கானல் காடுகளை வனவிலங்குகள் வாழ்விடமாக தமிழக அரசு பார்க்காமல், அங்கு கடந்த கால் நூற்றாண்டில் சுற்றுலாத் திட்டங்களுக்கு முக்கியத்தும் கொடுக்கிறது. காடுகள் அழிக்கப்பட்டு கான்க்ரீட் கட்டிடங்களாக மாற்றப்பட்டதால் பெரும்பாலான  வனவிலங்குகள் வாழ்விடத்தை இழந்தன.

சிறுத்தைப்புலி, காட்டுமாடுகள், புலி உள்ளிட்ட முக்கியவன உயிரினங்களை வேட்டை கும்பல் கொடைக்கானல் காடுகளில் சத்தமில்லாமல் வேட்டையாடி அழித்து வருகின்றனர்.  அதனால், கொடைக்கானலில் வனவிலங்குகள் எண்ணிக்கை குறைவதாகவும், புலி, சிறுத்தை புலிகள் உள்ளதா? சந்தேகமும் எழுந்தது. 

கொடைக்கானலில் கடந்த 5 ஆண்டு வனவிலங்கு கணக்கெடுப்பை மதுரை நெல்பேட்டையை சேர்ந்த ஹக்கீம் பெற்றுள்ளார். 

அவர் கூறுகையில், ‘‘கொடைக்கானல் வனத்தில் 2015-16, 2016-17, 2017-18, 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பினை எங்களது மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் பெற்றோம். கொடைக்கானல் வனத்தில் தற்போது 4 புலிகள், 12 சிறுத்தைகள் உள்ளிட்ட 20 வகையான வன உயிரினங்கள் இருப்பதாகவும் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கணக்ககெடுப்பில் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

2015-16 ல் 1,043 வன உயிரினங்களும், 2016-17ல் 1129 வன உயிரினங்களும், 2017-18ல் 1,428 வன உயிரினங்களும் 2018-19-ல் 1,526 வன உயிரினங்களும் இருப்பதாக வனத்துறை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் தந்துள்ளனர். 

2019-20ம் ஆண்டிற்கான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 20 வகை முக்கிய வன விலங்குகள் வாழும் கொடைக்கானல் மலையில் பல்லுயிரிகள் பெருக்கத்திற்கு வனத்துறை  எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை. 

மேலும், அத்தகைய வனவிலங்குகள் வாழ்விடத்தில் சுற்றுலா ஸ்தலங்களை அமைத்து, ரிசார்ட், ஹோட்டல்கள், விடுதிகள், அதற்கு காடுகள் நடுவே சாலைகளை அமைத்து கொடைக்கானல் காடுகளை வனத்துறை சுற்றுலாத்துறைக்கு வணிக ரீதியாக வாடகைக்கு விட்டுள்ளது. 

அதுபோல், இந்த உரியினங்களிடம் திடீரென்று சுற்றுலா மையங்கிளல் புகுந்தால் அவைகளிடம் இருந்து மனிதர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. 
புலி இருந்தாலே கூட வன பாதுகாப்பு சட்டப்படி புலிகள் சரணாலயம் அமைக்க வழியுள்ளது. இங்கே 4 புலிகள் உள்ளன. தண்ணீருக்கு மனிதனே கஷ்டப்படும் இக்காலத்தில் வன விலங்குகளுக்கு தண்ணீர் கஷ்டம் வந்தால் ஊருக்குள் வருவதை தவிர்க்க முடியாது.

அதனால், சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை கைவிட்டு கொடைக்கானல் காடுகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், ’’ என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x