Published : 29 Jul 2019 12:31 PM
Last Updated : 29 Jul 2019 12:31 PM
ஒரு விருந்தில் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவது பாயாசம்தான். சர்க்கரை நோயாளிகள்கூட, கொஞ்சம் பாயாசத்தை ருசித்துப் பார்க்கவே விரும்புவார்கள். தமிழகத்தில் விருந்தில் தவறாது இடம் பெறும் பாயாசம், கேரள மாநிலத்தில் கோயில்களிலேயே வழங்குவார்கள்.
அடபிரதாமன், சேமியா, பலடா, சக்கபிரதாமன் (பலாப்பழம் ), அரி பாயாசம் (அரிசி), பருப்பு பழ பிரதாமன் (வாழைப்பழம் ), செருபருப்பு பாயாசம், கோதுமை பாயாசம் என 36 வகையான பாயாசங்கள் உள்ளன. இத்தனை வகை பாயாசங்களையும் ஒரே நேரத்தில் சுவைக்க வாய்ப்புக் கிடைத்தால் எப்படி இருக்கும்?
இப்படி பாயாசங்களைக் கொண்டாட கோவையில் முதல்முறையாக நேற்று ‘உலக பாயாச தினம்’ கொண்டாடப்பட்டது. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை பழமுதிர் நிலையத்தில் நேற்று இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த முஜிப், தினேஷ், அன்வர் ஆகியோரிடம் பேசினோம். “மக்களிடையே ஆரோக்கியமான பானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக பாயாசம் நாளைக் கொண்டாடினோம். கேரளாவின் ஆரோக்கியமான இந்த பானங்களை அருந்தி மகிழ, கோவை மக்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
வழக்கமாக, திருவிழா, பண்டிகை, விருந்துகளில் உணவுக்கு முன்போ, பின்னரோதான் பாயாசம் கிடைக்கும். ஆனால், நாங்கள் 36 வகையான பாயாசங்களை ‘தி ஃபுட் ஸ்கொயரில்’ வழங்க உள்ளோம். சூடான மற்றும் குளிர்ந்த பாயாசம் கிடைக்கும். பாயாசம் ஓர் ஊட்டச்சத்துமிக்க, ஆரோக்கியமான, இனிமையான பானம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT