தென்மேற்கு பருவமழை காலத்தில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிக மழை

தென்மேற்கு பருவமழை காலத்தில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிக மழை
Updated on
1 min read

சென்னை

தென்மேற்கு பருவமழைக் காலத் தில் திருவண்ணாமலை மற்றும் சென்னையில் அதிக அளவு மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 8-ம் தேதி கேரளாவில் தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே பருவமழை தீவிரமடையாமல் இருந்தது. இந்த காலகட்டத்தில் தமிழகத்திலும் குறிப்பிடும்படியாக மழை இல்லை. சென்னையில் கடந்த ஜூன் 25-ம் தேதி முதலே மழை பெய்யத் தொடங்கியது. பல மாவட்டங்களில் வழக்கத்தை விட மழை குறைவாக பெய்துள்ளது. ஆனால் திருவண்ணாமலை மற்றும் சென்னை மாவட்டங்களில் மட்டும் வழக்கத்தை விட அதிக மாக பெய்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியதாவது:

இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 28-ம் தேதி வரை யிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச் சேரியில் 90 மிமீ மழை பெய்துள் ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 123 மிமீ மழை பெய்யும். இதுவரை 27 சதவீதம் வழக்கத்தை விட குறைவாக மழை பெய்துள்ளது. அதே நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 252 மிமீ மழை பெய்துள்ளது. அங்கு வழக்கமாக 142 மிமீ மழை பெய்யும். இந்த முறை வழக்கத்தை விட 76 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.

அதேபோன்று, சென்னை மாவட்டத்தில் வழக்கமாக 163 மிமீ மழை பெய்யும். இந்த ஆண்டு 247 மிமீ பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 51 சதவீதம் அதிகம். ஆனால் நாமக்கல் மாவட்டத்தில் 78 சதவீதம், கோவை மாவட்டத்தில் 74 சதவீதம், ராமநாதபுரம் மாவட் டத்தில் 66 சதவீதம், நாகப்பட்டி னம் மாவட்டத்தில் 57 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.

வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஓரிரு தினங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப் புள்ளது. அதனால் அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் தென் மேற்கு பருவக்காற்றால் கிடைக்கக் கூடிய மழை குறையும். அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங் களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in