Published : 27 Jul 2019 02:44 PM
Last Updated : 27 Jul 2019 02:44 PM
சென்னை
நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வரும் அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரிப்பது வேதனை அளிக்கிறது என, மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், "நாடாளுமன்றத்தில் பாஜக கொண்டு வரும் அத்தனை மக்கள் விரோத மசோதாக்களையும் ஆளும் அதிமுக ஆதரிக்கிறது. இது வேதனைக்குரியது. கூட்டணி தர்மம் என்பது வேறு, கொள்கை நிலைப்பாடு என்பது வேறு. அதை மனதிலே வைத்து அதிமுக செயல்படவில்லை. பாஜக எதை முன்மொழிந்தாலும் அதை வழிமொழியக்கூடிய நிலையில் இரு அவைகளிலும் அதிமுக செயல்படுகிறது
தமிழை விட சமஸ்கிருதம் மூத்த மொழி என, ப்ளஸ் 2 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளது, தமிழ் மொழியை சமஸ்கிருதத்துக்கு பின்னால் தோன்றிய மொழி என இளைய, பிஞ்சுத் தலைமுறையினருக்கு தவறான வரலாற்றை பதிவு செய்யும் நோக்கில், பாடத்திட்டத்தை வகுத்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து, அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மைக்கு மாறாக வரலாற்றை பதிவு செய்த அந்த பாடத்திட்டத்தை மாற்றி வரலாற்று உண்மையை, பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்", என திருமாவளவன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT