Published : 27 Jul 2019 10:43 AM
Last Updated : 27 Jul 2019 10:43 AM

அரசுப் பள்ளி மாணவிகள் வீதியில் இறங்கி போராட்டம்: ஒரு மணி நேரத்தில் கணித ஆசிரியை நியமனம்

புதுச்சேரி

இரண்டு மாதங்களாக கணித ஆசிரியர் இல்லாததை கண்டித்து நகரப் பகுதியின் அரசுப் பள்ளி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வீதியில் இறங்கி நடத்திய போராட்டத்தால் ஒரு மணி நேரத்தில் கல்வித்துறை ஆசிரியையை நியமித்தது.

புதுச்சேரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது திருவள்ளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இப் பள்ளி பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து பல ஆண்டு களாக சிறப்பிடம் பெற்று வருகிறது. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் இப்பள்ளியை நவீன மாக்கியுள்ளனர். அத்துடன் நடப்பாண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்ற ஒரே அரசுப் பள்ளி மாணவி சினேகப்பிரியாவும் இப்பள்ளி மாணவிதான்.

இங்கு பிளஸ்1 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக கணித ஆசிரியர் நியமிக்கப்பட வில்லை. மாணவிகள் சார்பில் கல்வித்துறைக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதை கண்டிக்கும் வகையில் மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் வெளியில் உள்ள வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு வேறொரு பள்ளியில் இருந்த கணித ஆசிரியை ஒருவரை இப்பள்ளிக்கு நியமித்தனர். அந்த ஆசிரியை உடனடியாக பள்ளிக்கு சென்று பணியில் சேர்ந்தார். அவரை மாணவிகள் மகிழ்ச்சியோடு வரவேற்று போராட்டத்தை கைவிட்டனர்.

இதுதொடர்பாக மாணவிகள் தரப்பில் கூறுகையில், “பருவத்தேர்வு நடைபெற உள்ள சூழலில் கணித பாடத்துக்கு ஆசிரியை இல்லை. இதுதொடர்பாக பலமுறை கல்வித்துறையிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு படிப்பு முக்கியம். அதற்கு ஆசிரியை தேவை என்பதால் வீதியில் இறங்கி போராடினோம். தற்போது ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x