Published : 26 Jul 2019 05:02 PM
Last Updated : 26 Jul 2019 05:02 PM

புதுச்சேரியிலும் அத்திமர அனந்தரங்கநாதர்: பொதுமக்கள் தரிசிக்க ஏற்பாடு

அத்தி மரத்திலான அனந்த ரங்கநாதர்

புதுச்சேரி

புதுச்சேரியிலுள்ள 200 ஆண்டுகள் பழமையான ராமானுஜர் பஜனை மடத்தில் சயன கோலத்தில் அத்தி மரத்திலான அனந்த ரங்கநாதரை தரிசிக்கலாம்.

காஞ்சியெங்கும் தற்போது மக்கள் வெள்ளம் அத்திவரதரை தரிசிக்க குவிகின்றனர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து எடுத்து வரப்படும் அத்திவரதர் பக்தர்களுக்கு  அருள்பாலிக்கிறார். புதுச்சேரியிலும் அத்திமரத்தலான அனந்த ரங்கநாதர் சன்னதியுள்ளது.

புதுச்சேரியில் செயின்ட் தெரசா வீதியிலுள்ள 200 ஆண்டு பழமையான ராமானுஜர் பஜனை மடத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அனந்தரங்கநாதர் சன்னதியுள்ளது. தற்போது அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இம்மடம் உள்ளது.

இதுதொடர்பாக அர்ச்சகர் பாலாஜி கூறுகையில், "ஆதிசேஷன் மீது அனந்த சயன கோலத்தில் ஆறு அடி நீளத்தில் அத்திமரத்தில் அனந்த ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி உடன் காட்சி தருகிறார். கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ள இவர் கையில் சங்கு, சக்கராயுதம் ஏந்தியுள்ளார்.

அத்திமரம் புஸ்ஸி வீதியிலுள்ள ஒரு பக்தர் வீட்டிலிருந்து எடுத்து வரப்பட்டு மடத்திலேயே வைத்து இச்சிலை அழகுற வடிவமைக்கப்பட்டு 2011-ல் நிறுவப்பட்டது. அரங்கநாதருக்கு தைலக்காப்பும், சிறப்பு அலங்காரம் உண்டு. காலை 8 மணி முதல் பகல் 12 வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 9 வரையிலும் தரிசிக்கலாம். பகல் 12-க்கு அன்னதானமும் உண்டு" என்று தெரிவித்தார்.

திருக்கோயிலின் சிறப்பு அதிகாரி அன்பு செல்வன் கூறுகையில், "புதுச்சேரியில் இங்கு மட்டுமே அத்திமரத்திலான அனந்த ரங்கநாதரை தரிசிக்கலாம். மாதந்தோறும் ரேவதி, திருவாதிரை நட்சத்திர நாட்களில் சிறப்பு வழிபாடு உண்டு. ஆழ்வார் திவ்ய பிரபந்த சேவையும் சிறப்பாக நடைபெறும். சுக்கிர திசையில் பாதிப்பு உள்ளோர், திருமண தடையுள்ளோர் வெள்ளியன்று நெய்தீபம் ஏற்றி பெருமாளை பிரார்த்தித்தால் பலன் நிச்சயம்" என்று தெரிவித்தார்.

-செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x