Published : 25 Jul 2019 09:42 PM
Last Updated : 25 Jul 2019 09:42 PM
புதுடெல்லி: மக்களவையில் இன்று நடிகர் சூர்யா மிரட்டல் விவகாரம் எழுப்பப்பட்டது. இதை எழுப்பிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.பியான சு.வெங்கடேசன், சகிப்புத்தன்மையை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மக்களவையில் இன்று மாலை பூஜ்ஜிய நேரத்தில் தேசிய கல்விக்கொள்கை குறித்த சர்ச்சை மீது மதுரை எம்.பியான சு.வெங்கடேசன் பேசியதாவது: தேசிய கல்விக் கொள்கை 2019 மீது கருத்து தெரிவிக்குமாறு அரசு அறிவித்திருந்தது.
484 பக்க அறிக்கை மீது ஒரு மாதத்திலேயே எப்படி கருத்து தெரிவிக்க முடியும் என்று எதிர்கட்சிகளும் , கல்வியாளர்களும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அரசு மேலும் ஒரு மாதத்திற்கு காலநீட்டிப்பு செய்தது.
இந்நிலையில் தமிழகத்தின் திரைக்கலைஞர் சூர்யா அவர்கள் கல்விக் கொள்கையின் பால் தனது கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். ஆனால் ஆளும் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் சூர்யா வன்முறையைத் தூண்டுகிறார் என்று கூறுகிறார்.
சூர்யா அவர்களுடைய கருத்துக்கு ஆதரவு தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கருத்துக்களை பதிவிட்டு போது ஆளும் கட்சியைச் சார்ந்த இன்னொரு தலைவர் ரஜினிகாந்த் தேவையில்லாத குழப்பத்தை உருவாக்குகிறார் என்று கூறுகிறார்.
மற்றொரு தலைவரோ வெளிப்படையாக மிரட்டுகிறார்.
நான் அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் கருத்து தெரிவிக்க சொல்கிறீர்களா? அல்லது ஆதரவு தெரிவிக்க சொல்கிறீர்களா?
ஆதரவு தெரிவிப்பதாக இருந்தால் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கருத்துச் சொன்னால் போதும் என்று
வெளிப்படையாக அறிவியுங்கள். கருத்துத் தெரிவிப்பதாக இருந்தால் அதைக் கேட்கிற காதும், அதை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மையும் இருப்பதை இந்த அவையில் உறுதி செய்யுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-ஆர்.ஷபிமுன்னா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT