Published : 25 Jul 2019 04:25 PM
Last Updated : 25 Jul 2019 04:25 PM
மக்களவையில் 23 ஆண்டுகளுக்குப் பின் தனது கன்னிப்பேச்சைத் தொடங்குவதாக வைகோ கூற, பிரதமர் மோடி மேசையைத் தட்டி ரசித்துச் சிரித்தார்.
இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழில் உளமார உறுதி கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார் வைகோ. 23 ஆண்டுகளுக்குப்பின் மாநிலங்களவையில் இன்று உரையாற்றினார்.
இந்தியாவில் மூடப்பட்ட நூற்பு ஆலைகள் குறித்த கேள்வியின் போது ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் வைகோ துணைக்கேள்வி எழுப்பி பேசுகையில், “23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மேலவையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி ” என்றார்.
வைகோ இதைச் சொனானவுடன் அவையில் அமர்ந்து இருந்து பிரதமர் நரேந்திர மோடி மேசையைத் தட்டி வரவேற்றார்.
வைகோ நூற்பு ஆலைகள் குறித்துப் பேசியதாவது:
“பருத்தி விலை பஞ்சு விலை மேலும் கீழுமாய் திடீர் திடீரென மாறுவது ஒவ்வொரு ஆண்டும் நூற்பு ஆலைகளுக்கு நெருக்கடி ஆகிறது. மூடப்பட்ட ஆலைகளால் இந்தியாவில் எத்தனை லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என்று அமைச்சர் பதில் தருவாரா?
தமிழ்நாட்டில் நூற்பு ஆலைகள் சுற்றுச்சூழல் விதிகளை முறையாகப் பின்பற்றுகின்றன. மற்ற மாநிலங்களில் அப்படிப் பின்பற்றுவது இல்லை. இதனால் தமிழக நூற்பு ஆலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் விதிகளை சமமாகப் பின்பற்ற அமைச்சர் நடவடிக்கை ஏடுப்பாரா?
சீனாவில் இருந்து ஏராளமான ஆயத்த ஆடைகளைக் குறைந்த விலையில் வங்கதேசத்திற்கு அனுப்புகின்றார்கள். அங்கே அந்த நாட்டு முத்திரை பதித்து இந்தியாவிற்குள் கொண்டு வந்து குவிக்கின்றார்கள். இதனால் நமது நூற்பு ஆலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் தெரிவிப்பாரா?”.
இவ்வாறு வைகோ பேசினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, ''அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை'' என்றார்.
அதற்கு வைகோ, ''உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT