Published : 24 Jul 2019 10:28 AM
Last Updated : 24 Jul 2019 10:28 AM

வேலூர் தேர்தல் வெற்றிதான் அதிமுகவின் எதிர்காலம்: அமைச்சர் கே.சி.வீரமணி கருத்து 

வேலூர் 

வேலூர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால்தான் நமது கட்சியின் எதிர்காலம் இருக்கிறது என்று அதிமுக தேர்தல் ஆலோ சனைக் கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப் பேரவை தொகுதி வாரியாக நியமிக் கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத் தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், அமைச்சர்கள் வேலு மணி, தங்கமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி.சண் முகம், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், உதயகுமார், ராஜலட்சுமி, வெல்லமண்டி நடராஜன், நிலோபர் கபீல், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, வளர்மதி, நத்தம் விஸ்வாதன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘இடையில் தடைபட்டு மீண்டும் அறிவிக்கப்பட்டு நடக்கின்ற தேர்தல் இது. இந்த மாவட்டத்தில் ஆலோசனை பணிகள் எல்லாம் ஏற் கெனவே முடிக்கப்பட்டு விட்டது.

நிர்வாகிகள் அந்தந்த தொகுதி களில் சென்று கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் பணியை முழுமையாக செயல்படுத்தினால் நமது வெற்றியை யாராலும் தடுக்க முடி யாது. அந்தளவுக்கு எல்லா பணியும் முடிந்துவிட்டது. இந்தத் தேர்தலில் சிறுபான்மையின மக்கள் நமக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள் ளனர். கடந்த தேர்தலைக் காட்டிலும், இப்போது முழுமையாக ஆதரிக் கின்றனர். இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

யாராலும் தடுக்க முடியாது

ஆம்பூர், வாணியம்பாடி, பேர ணாம்பட்டு பகுதி முஸ்லிம்கள் நமக்கு வாக்களிப்பதாக கூறியுள்ள னர். ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவை இடைத் தேர்தல் களில் நாம் வெற்றி பெறாவிட்டா லும் கிராமங்களில் அதிக வாக்கு கள் பெற்றுள்ளோம். ஒரு வாக்குச் சாவடிக்கு கூடுதலாக 200 வாக்கு கள் பெற்றால்கூட நமது வெற்றியை தடுக்க முடியாது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் நமது கட்சியின் எதிர்காலம் இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர்’’ என்றார்.

இரு மொழி கொள்கையில் உறுதி

வேலூர் மக்களவை தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுகவின் இரும்புக் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த தேர்தல் அமைய உள்ளது. இந்த அரசு எப்போதும் மக்களின் அரசாக இருக்கும் என்று எடுத்துரைப்போம். மக்கள் கையில்தான் இந்த வெற்றி நிர்ணயிக்கக்கூடியதாக இருக்கிறது. கடந்த முறை நாங்கள் தவறி வாக்களித்து விட்டோம் என்று எங்களிடம் மக்கள் கூறி வருகின்றனர். இந்த முறை தவறாமல் அதிமுகவுக்கு வாக்களிப்பதாக தெரிவித்துள்ளனர். புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்துத் தரப்பிலும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x