Published : 09 Jul 2015 08:35 AM
Last Updated : 09 Jul 2015 08:35 AM
திமுகவுடன் கூட்டணி என்று நான் சொல்லவில்லை என்றார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
திருச்சியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள இடத்தைப் பார்வையிடுவதற்காக நேற்று திருச்சி வந்த அவர், பொதுக்கூட்டம் நடத்துவதற்காக தேர்வு செய்யப் பட்டுள்ள ஜி கார்னர் பகுதியைப் பார்வையிட்டார். பின்னர், காங்கிரஸ் மாவட்ட அலுவ லகமான அருணாசல மன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வருகிற 15-ம் தேதி, தமிழகம் முழுவதும் காமராஜர் பிறந்த நாளை தமிழ்நாடு காங்கிரஸ் வெகு விமரிசையாகக் கொண்டாட உள்ளது. விழாவின் ஒரு பகுதியாக திருச்சியில் எனது தலைமையில் வருகிற 24 அல்லது 25-ம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.
திருச்சி வரும் ராகுல் காந்தி நேரம் ஒதுக்கி விவசாயிகளை சந்திப்பார். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.
நானும் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பதில் காங்கிரஸும், திமுகவும் ஓரணியில் இருப்போம் என்றுதான் கூறினேனே தவிர, திமுகவுடன் கூட்டணி என்று சொல்லவில்லை. ப.சிதம்பரம் மீது ஆதாரபூர்வமாக புகார் வந்தால் அவரே பதில் அளிப்பார். காங்கிரஸும் பதில் அளிக்கும்.
மத்தியில் ஊழலற்ற ஆட்சியைத் தருவோம் என்று பாஜகவினர் சொன்னார்கள் ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை. பாஜகவில் உள்ள பெண் தலைவர்கள் குறிப்பாக, வசுந்தரா ராஜே, ஸ்மிருதி இரானி, சுஷ்மா ஸ்வராஜ், பங்கஜ் முண்டே, உமா பாரதி ஆகியோர் ஊழலில் மன்னாதி மன்னிகளாகத் திகழ்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT