Last Updated : 23 Jul, 2019 04:26 PM

 

Published : 23 Jul 2019 04:26 PM
Last Updated : 23 Jul 2019 04:26 PM

விருதுநகர் குழந்தை கடத்தல் வழக்கில் தலைமறைவான பெண்ணைப் பிடிக்க தனிப்படை அமைப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குழந்தைக் கடத்தல் வழக்கில் தலைமறைவான பாட்டியைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் அல்லம்பட்டி ஆர்.எஸ். நகரைச் சேர்ந்தவர் சக்திமுருகன். இவரது மனைவி ராஜலட்சுமி (20). இவருக்கு கடந்த 15.3.2016ல் அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது, ராஜலட்சுமிக்கு திருமண வயது இல்லை என்பதால் அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் வினோ தமயந்தியும், அவரது கணவரும் மருத்துவருமான வடிவேல் முருகனும் ராஜலட்சுமயின் தாய் முத்துலட்சுமியிடம் குழந்தையை தத்துக்கொடுத்துவிட்டால் உங்களுக்கு பிரச்சினையும் இல்லை, பணமும் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியாகத் தெரிகிறது.

அதையடுத்து, முத்துலட்சுமியும் தனது மகளுக்குத் தெரியாமல் குழந்தையை கடத்திச்சென்று சட்டத்திற்குப் புறம்பாக அருப்புக்கோட்டை மணி நகரைச் சேர்ந்த குழந்தையில்லா தம்பதியான ஜெயராஜ்- சண்முகப்பிரியாவுக்கு தத்துக்கொடுத்துள்ளார். மேலும், குழந்தை இறந்துவிட்டதாகவும் மகள் ராஜலட்சுமியிடம் அவர் கூறியுள்ளார்.

இந்த விவரம் தற்போது தெரியவர இதுகுறித்து ராஜலட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். அதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவின்பேரில் எம்.ரெட்டியபட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து டாக்டர் தம்பதிகள் வடிவேல் முருகன், வினோ தமயந்தி மற்றும் குழந்தை சட்டத்திற்கு புறம்பாக தத்து பெற்ற ஜெயராஜ்- சண்முகபிரியா ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இவர்கள் 4 பேரும் விருதுநகரில் உள்ள முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மருதுபாண்டி முன் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டனர். 

அதைத்தொடர்ந்து, தலைமறைவாக உள்ள ராஜலட்சுமியின் தாய் முத்துலட்சுமியை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x