Published : 23 Jul 2019 12:04 PM
Last Updated : 23 Jul 2019 12:04 PM

கல்விக் கொள்கையை வைத்து அரசியல் செய்ய தேவையில்லை: அமைச்சர் பாண்டியராஜன்

கல்விக் கொள்கையை வைத்து அரசியல் செய்யத் தேவையில்லை.  இந்தியை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது தேவையற்றது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

ஆவடி அருகே உள்ள கோயிலுக்குச் சொந்தமான குளத்தைத் தூர்வாரும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்பட்டது. இதை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் பாண்டியராஜன்.

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதில் 42 புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒன்றுதான் மும்மொழிக் கொள்கை. 

இந்திதான் கட்டாயமாக மூன்றாவது மொழி என்பதை மத்திய அரசே எடுத்துவிட்டது. அதைவைத்து அரசியல் செய்யும் நிலைப்பாடு தேவையற்றது. பல அறிஞர்களிடம் கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும். 

கேபினட் அளவிலும் இது விவாதிக்கப்படும். அதன்மூலம் தமிழக அரசின் நிலைப்பாடு வடிவமைக்கப்படும். அதன்பிறகு கருத்துகளை மத்திய அரசுக்கு அளிப்போம்"  என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x