Published : 23 Jul 2019 11:45 AM
Last Updated : 23 Jul 2019 11:45 AM

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை; சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். மலர்விழி தெரிவித்துள்ளார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.  இதன் காரணமாக கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து மூன்று தினங்களுக்கு முன்பு திறந்துவிடப்பட்ட சுமார் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது ஒகேனக்கலுக்கு வந்து கொண்டுள்ளது.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசல் இயக்கத் தடை விதிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒகேனக்கலில் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒகேனக்கலில் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பலரும் ஏமாற்றமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x