Published : 23 Jul 2019 10:49 AM
Last Updated : 23 Jul 2019 10:49 AM

3, 5, 8-ம் வகுப்புகளில் பொதுத் தேர்வு ஏன்?- எச்.ராஜா விளக்கம்

3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருப்பது ஏன் என்பது குறித்து எச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''3, 5, 8-ம் வகுப்புகளில் நடத்தப்படும் தேர்வுகள், பொதுத் தேர்வுகளோ அல்லது அவர்கள் தேர்ச்சியை நிறுத்தி வைப்பதற்கோ அல்ல. இது மாணவர்களுக்கான தேர்வு என்பதைவிட, இதை ஆசிரியர்களுக்கான தேர்வு எனலாம்.

மாணவர்கள் எந்த அளவுக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவே தேர்வு. 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்கிறார்களா என்று அந்த நேரத்தில் பரிசோதிப்பது வீண்வேலை. 

அதனால் 3-ம் வகுப்பிலேயே கற்பித்தல் குறித்த தகுதியை அறிந்துகொள்ள, மாணவர்களிடம் கேட்டால்தான் தெரியவரும். அதனால்தான் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கற்றல் மட்டுமல்ல கற்பித்தல் திறனும் சேர்ந்தது. இதில் என்ன தவறு இருக்கிறது?

அடுத்ததாக இன்னொரு வதந்தி நிலவுகிறது. ஓராசிரியர் பள்ளியும் 20 மாணவர்களுக்குக் குறைவான பள்ளிகளும் மூடப்படும் என்கிறார்கள். 50 ஆயிரம் பள்ளிகள், 12 ஆயிரம் பள்ளிக்கூடங்களாக மாறிவிடும் என்கின்றனர். இது முழுக்க முழுக்க அறியாமல் சொல்லப்பட்டது. இதைவிடப் பெரிய பொய் இருக்க முடியாது'' என்றார் எச்.ராஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x