Published : 22 Jul 2019 10:07 PM
Last Updated : 22 Jul 2019 10:07 PM

மழை நீரைச் சேகரிக்கும் எந்தத் திட்டமும் இல்லை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி

தமிழகத்தில் மழை நீரைச் சேகரித்து வைக்க தமிழக அரசிடம் திட்டங்கள் ஏதும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் 1,101 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மழை நீர் பூமியில் இறங்குவதற்கு ஏதுவாக, மழைநீர் வடிகால்களின் அடிப்பகுதியில் கான்கிரீட் போட வேண்டாம் என உத்தரவிடக் கோரி சண்முகம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னையில் அண்ணாநகர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அனைத்து வகையான கழிவு நீரும் கூவம் ஆற்றில் கலக்கப்படுவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழக அரசிடம் மழை நீரைச் சேமித்து வைக்க எந்த ஒரு திட்டமும் இல்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் சென்னையில் எத்தனை நீர் நிலைகள் உள்ளன? அவற்றில் சிலவற்றை ஏன் பூங்காக்களாக மாற்றியுள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர்.

இதற்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், சென்னையில் கோயில்களில் உள்ள குளங்களைச் சேர்த்து 210 நீர்நிலைகள் இருப்பதாகவும், அதில் மக்கள் பயன்பாட்டுக்காக சிலவற்றின் சுற்றுப்புறம் மட்டும் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நேற்று பெய்த மழை நீர் முற்றிலும் வடிந்து விட்டதா?  அதை நேரில் சென்று ஆய்வு செய்ய என்னுடைய காரில் வர மாநகராட்சி அதிகாரிகள் தயாரா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அரசுத் திட்டங்களுக்காக பொதுப்பணித் துறை பொறியாளர்கள் வகுக்கும் செலவீனங்கள் மதிப்பீட்டில் பல குளறுபடிகள் உள்ளன. மழை நீர் வடிகால்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வழக்குரைஞர் ஆணையரை ஏன் நியமிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.

மழை நீர் வடிகாலுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து கூடுதல் விவரத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x