Published : 22 Jul 2019 11:58 AM
Last Updated : 22 Jul 2019 11:58 AM

இந்தி மொழி கூடாது என யாரும் சொல்லவில்லை: நாராயணசாமி கருத்து

இந்தி மொழியைப் படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (திங்கட்கிழமை) காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நாராயணசாமி. அப்போது பேசிய அவர், ''மத்திய அரசு கொல்லைப்புறம் வழியாக இந்தியைத் திணிப்பதை எதிர்க்கிறோம். இந்தி மொழியைப் படிக்கக்கூடாது என்று யாரும் சொல்லவில்லை. படிக்க விரும்புவர்கள் படிக்கலாம். எல்லோருக்கும்  மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டிய விருப்பம் இருக்கிறது. 

ஆனால் மத்திய அரசு கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைப் பாதிக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டம் பாதித்துள்ளது. முதலில் நீட் தேர்வு வந்தது. இரண்டாவதாக நெக்ஸ்ட் தேர்வைக் கொண்டுவருவோம் என்று சொல்கிறார்கள். 

நீட் தேர்வாலேயே நமது குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டனர். நெக்ஸ்ட் தேர்வால் இன்னும் நமது பிள்ளைகள் தற்கொலை செய்துகொள்வர். தமிழகம் மற்றும் புதுசேரி மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்துகொள்வதில்லை என்பதுதான் எனது கருத்து'' என்றார் நாராயணசாமி.

தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையில் மூன்றாவது மொழியாக இந்தி பரிந்துரைக்கப்பட்டதில் இருந்து, இந்தித் திணிப்பு சர்ச்சைகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x