Published : 20 Jul 2019 02:53 PM
Last Updated : 20 Jul 2019 02:53 PM
சென்னை
காவிரி உரிமை, ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி பெற்ற வெற்றி என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டியது யார் என்ற விவாதம் இன்று (சனிக்கிழமை) சட்டப்பேரவையில் நடைபெற்றது.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "காவிரி பிரச்சினை, மிக உணர்வுபூர்வமான பிரச்சினை. காவிரி நதிநீர் பிரச்சினையை பொறுத்தவரை, சுமார் 15 ஆண்டு காலம் மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற வாய்ப்பு திமுகவுக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி நிரந்தர தீர்வு எட்டப்பட்டு இருக்கலாம். அந்தக் காலக்கட்டத்தில் தவற விட்டதன் காரணமாக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் மூலமாக பல்வேறு தீர்ப்புகளை பெற்று அமல்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.
2007-ல் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்து 2 மாதம் ஆயிற்று. அந்த 2 மாத இடைவேளையில், திமுக அனைத்தும் செய்து இருந்தால் கர்நாடகாவோ, கேரளாவோ, புதுச்சேரியோ நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. அதை தவறவிட்டது திமுக தான்", என பேசினார்.
துரைமுருகன்: கோப்புப்படம்
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக ஆட்சிக் காலத்தில் தான் காவிரி நடுவர் மன்றம் அமைக்க கோரிக்கை எழுந்ததாகவும், திமுக முயற்சியால் தான் அது அமைக்கப்பட்டதாகவும் கூறினார்.
இதையடுத்து பேசிய முதல்வர் பழனிசாமி, "எதிர்க்கட்சி துணைத் தலைவர் சத்தமாக பேசினால் ஒன்றும் நடக்காது. நடந்தது நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியும். 2007-ல் நடுவர்மன்ற இதி தீர்ப்பு வந்தது. 2 மாத காலம் இருந்தது. திமுக நினைத்திருந்தால் தேவையான அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசிதழில் வெளியிட்டு, அதற்கு ஒரு வடிவம் கொடுத்து இருந்தால், இந்த பிரச்சினையே வந்திருக்காது.
அந்த நேரத்திலே, திமுக தவறவிட்டு விட்டது. உச்ச நீதிமன்றத்தில் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தது என்கிறீர்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பலமுறை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை வைத்தார்.
உச்சநீதிமன்றம் போய் தான் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை பெற்றதும் அதிமுக அரசு, அம்மா தான். இதை எல்லாம் கோட்டைவிட்டுவிட்டு, பிறகு நடுவர்மன்ற தீர்ப்பின்படி நடைமுறைப்படுத்தாத காரணத்தினாலே மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தான் நாம் இறுதி தீர்ப்பினை பெற்று இருக்கிறோம். ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி பெற்ற வெற்றி, வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
காவிரி பிரச்சினைக்காக வாழப்பாடி ராமமூர்த்தி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். ஆகவே, அதற்கு திமுக ஏதாவது குரல் கொடுத்திருக்கிறதா?
எதிர்க்கட்சி துணைத் தலைவர் சமாளிக்கிறார். தவறவிட்டுவீட்டீர்கள். தவறவிட்டுவிட்ட பிறகு அதை நியாயப்படுத்தி பேசுவது எந்த விதத்திலும் சரியாக இருக்காது. நமக்கு கிடைக்கின்ற வாய்ப்பை, அதை பயன்படுத்தி இருந்தால் தமிழக விவசாயிகள் நன்மை பெற்று இருப்பார்கள். டெல்டா பாசன விவசாய மக்களுக்கு தேவையான நீர் கிடைத்திருக்கும்.
2007-லிருந்து 2019 வரை போராட வேண்டிய அவசியம் இருந்திருக்காது"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT