Published : 18 Jul 2019 01:42 PM
Last Updated : 18 Jul 2019 01:42 PM

எழுவர் விடுதலை: ஆளுநருக்கு உத்தரவிட கோரிய நளினி மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

கடந்த எட்டு மாதங்களாக இந்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, தமிழக அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எட்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்துத் தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் ஆளுநருக்கு சட்ட பாதுகாப்பு இருந்தாலும் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்க முடியாது எனவும் வாதிடப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, ஆளுநருக்கு உத்தரவிடுமாறு கோருவதற்கு நளினிக்கு அதிகாரம் கிடையாது, அதனால், இந்த மனுவை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என, அரசு தலைமை வழக்கறிஞர் வாதாடினார்.

இதையடுத்து, 7 பேர் விடுதலை  தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர். 

-பாலசரவணக்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x