Published : 18 Jul 2019 01:08 PM
Last Updated : 18 Jul 2019 01:08 PM
-ஆர்.டி.சிவசங்கர்
உதகை படகு இல்லத்தில் இணை பிரியாத நண்பர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் மிரட்டியதால்தான் தற்கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் உதகை, காந்தல் பகுதியை சேர்ந்தவர்கள் கெளதம் மற்றும் டென்னீஸ். இவர்கள் இருவரும் இணைபிரியாத நண்பர்கள். கடந்த நான்கு நாட்களாக கூலி வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் இரு வீட்டாரும் உதகை ஜி1 காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.
காவல் துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை உதகை தேனிலவு படகு இல்லத்தில் இரண்டு சடலங்கள் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, காணாமல் போன நண்பர்கள்தான் ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் என உறவினர்கள் அடையாளம் காட்டினர்.
இதுகுறித்து உறவினர்கள் சிலர் கூறும்போது, ''உயிரிழந்த இரண்டு பேரின் மீதும் அடிதடி உள்ளிட்ட சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸார் தொடர்ந்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்த இளைஞர்கள் தற்கொலை செய்திருக்கலாம்'' என்று தெரிவித்தனர்.
நண்பர்கள் இருவரும் பெல்ட்டால் கட்டிகொண்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT