Published : 20 Jul 2015 08:30 AM
Last Updated : 20 Jul 2015 08:30 AM
இந்த ஆண்டு பிஎட் மாணவர் சேர்க்கையில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, இனிமேல் பொறியியல் பட்டதாரிகளும் பிஎட் படிப்பில் சேரலாம்.
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. மேலும், 600-க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. கல்வியியல் கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளும் ஒரு சில கல்லூரிகளில் எம்.பில் (கல்வியியல்) படிப்பும் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு வரை பிஎட் படிப்பு காலம் ஓராண்டாக இருந்து வந்தது. இந்த நிலையில், தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) உத்தரவின்படி, நடப்பு கல்வி ஆண்டு முதல் பிஎட் படிப்பு காலத்தை 2 ஆண்டுகளாக அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து பிஎட் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், 2015-16-ம் கல்வி ஆண்டுக்கான பிஎட் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டிருக்கிறார். அதில் முக்கிய அம்சமாக, பொறியியல் பட்டதாரிகளும் (பிஇ அல்லது பிடெக்) பிஎட் படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் என கூறப்பட்டுள்ளது. அவர்கள் அறிவியல் (இயற்பியல், வேதியியல்) மற்றும் கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளின் கீழ் பிஎட் படிப்பில் சேரலாம்.
குறைந்தபட்ச கல்வித்தகுதி, இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாக மதிப்பெண் தகுதி, உயர் கல்வித்தகுதி, என்சிசி, என்எஸ்எஸ் போன்றவற்றுக்கு சிறப்பு மதிப்பெண் உட்பட இதர விதிகளில் கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட அதே நடை முறைகளே இடம்பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு பிஎட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தியது. ஆனால், இந்த ஆண்டு அப்பொறுப்பு சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (2013-ம் ஆண்டு வரை தொடர்ந்து இதே கல்வி நிறுவனம்தான் பிஎட் மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு வந்தது)
பொறியியல் பட்டதாரிகளுக்கு பிஎட் சேரும் வாய்ப்பு அளிக் கப்பட இருப்பது குறித்து கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, “பிஇ, பிடெக் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் அவர்களுக்கு ஆசிரியர் பணி தரும் வகையில் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருக் கலாம்” என்று தெரிவித்தனர். பிஎட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடர்பான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளதால், விண்ணப்பங்கள் அடுத்த சில வாரங்களில் வழங்கப்படக்கூடும்.
பிஇ, பிடெக் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்துவரும் நிலையில் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT