Published : 17 Jul 2019 03:16 PM
Last Updated : 17 Jul 2019 03:16 PM

மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் மீதும், வேதாந்தா நிறுவனத்தின் மீதும் கிரிமினல் நடவடிக்கை எப்போது?- கே.எஸ்.அழகிரி கேள்வி

ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் மீதும், வேதாந்தா நிறுவனத்தின் மீதும், சட்டத்துறை அமைச்சர் சண்முகம் எப்போது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உள்ளார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"சட்டப்பேரவையில் நேற்று  (செவ்வாய்க்கிழமை) ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முதன்முதலில் அனுமதி அளித்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான் என்று கூறி, காங்கிரஸ் - திமுக மீது குற்றம் சாட்டி, பிரச்சினையை திசைதிருப்ப அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் கடுமையாக முயற்சி செய்திருக்கிறார். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற முயற்சியாகும். 

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட நாள் 30 ஜூன் 2015. ஆனால், இந்த நாட்களில் மத்தியில் ஆட்சி செய்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசா? பாஜக அரசா? என்பதை அமைச்சர் சி.வி. சண்முகம் தெளிவுபடுத்துவாரா? இந்த அனுமதியை வழங்குகிற வகையில் 24 பரிசோதனைக் கிணறுகளை தோண்ட திருவாரூர், திருமருகல், குடவாசல், கீவளூர் பகுதிகளில் அனுமதி அளித்தது மத்திய பாஜக அரசு. அதை தடுத்து நிறுத்தாமல், கண்டும் காணாமலும் இருந்தது தமிழக அதிமுக அரசு.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயல்
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இதற்காக, தமிழகத்தில் கடலூர் மாவட்டம் புவனகிரியிலும், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் நாகை மாவட்டம் மாதாணம் ஆகிய இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஓ.என்.ஜி.சி.யும், வேதாந்தா நிறுவனமும் கையொப்பம் இட்டிருக்கிறது. இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கூறியதற்கு அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் நேரிடையாகப் பதில் கூற தயாராக இல்லை. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கி ஆய்வு செய்ய, உற்பத்தி செய்ய வேண்டுமென்றால் தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறார். ஆனால், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வேதாந்தா நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய அனுமதி அளித்திருக்கிறது. 

அந்த அனுமதியின் அடிப்படையில் வேதாந்தா நிறுவனமும், ஓ.என்.ஜி.சி.யும் காவல்துறையின் பாதுகாப்போடு தமிழகத்தில் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்கு ஆய்வுகளையும், செயல் திட்டங்களையும் தீட்டி, செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து எல்லாம் தெளிவாக பதில் கூறாமல், பொத்தாம் பொதுவாக சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் அனுமதி பெறாமல் மத்திய அரசு எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது என்று கூறுவது அப்பட்டமான திசை திருப்புகிற முயற்சியாகும்.

எப்போது கிரிமினல் நடவடிக்கையை எடுக்கப்போகிறார்?
தமிழக அரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டு வந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உரிமை இருக்கிறது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறுகிறார். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக கிணறுகள் தோண்டுவதற்கும், கூடுதலாக இரண்டு கிணறுகள் தோண்டுவதற்கும் புதிதாக ஒப்பந்தம் போட்டிருக்கிற மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீதும், வேதாந்தா நிறுவனத்தின் மீதும் எப்போது கிரிமினல் நடவடிக்கையை அமைச்சர் சண்முகம் எடுக்கப்போகிறார் என்பதை தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அத்தகைய நடவடிக்கை எடுக்கிற துணிவு அதிமுக அரசுக்கு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறது. அதை தடுக்கக் கிரிமினல் நடவடிக்கை எடுப்போம் என்று தமிழக அமைச்சர் கூறுகிறார். கடந்த காலங்களில் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வை எதிர்ப்பதாக ஒருபுறம் கூறிக் கொண்டே மற்றொரு புறம் செப்டம்பர் 2017-ல் நீட் மசோதா திரும்ப அனுப்பப்பட்டதை மறைத்து கடந்த 21 மாதங்களாக அதிமுக அரசு இரட்டை வேடம் போட்டதைப் போல ஹைட்ரோ கார்பன் திட்டத்திலும் போட வேண்டாம் என்று தமிழக ஆட்சியாளர்களை கேட்டுக் கொள்கிறேன். 

இந்தச் சூழ்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாக காங்கிரஸ் கட்சி செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு தெரிவித்துள்ளார் கே.எஸ்.அழகிரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x