Published : 15 Jul 2019 04:22 PM
Last Updated : 15 Jul 2019 04:22 PM

பெண் காவல் ஆய்வாளர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கால் முறிவு: மதுபோதை நபர்கள் 3 பேர் கைது

மதுபோதையில் தாறு மாறாக வாகனத்தை ஓட்டிவந்த 3 இளைஞர்கள் பணி முடிந்து வீடு திரும்பிய பெண் ஆய்வாளர் வாகனம் மீது மோதியதில் ஆய்வாளரின் கால் முறிந்து படுகாயமடைந்தார்.

 

சென்னையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து மிகுந்த சாலையில் எதிர்திசையில் விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் வேகமாக ஓட்டிவருவது, இரண்டு பேருக்குமேல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இதை போக்குவரத்து போலீஸாரும் கண்டுகொள்வதில்லை.

 

இதன் விளைவு பலரும் விபத்தில் சிக்குகின்றனர். இதில் நேற்றிரவு பெண் காவல் ஆய்வாளரே விபத்தில் சிக்கி கால்முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மருதம் மாளிகையில் உள்ள செக்யூரிட்டி சென்னை காவல்பிரிவில் ஆய்வாளராக பணியாற்றுபவர் மகாலட்சுமி(44).

 

2002 பேட்ச் அதிகாரியான இவர் உதவி ஆய்வாளராக சேர்ந்து தற்போது ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது வீடு கொரட்டூர், சீனிவாசபுரத்தில் உள்ளது.

 

தினமும் பணிமுடிந்து தனது ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்புவார், நேற்றும் வழக்கம்போல் பணி முடிந்து இரவு வீடு திரும்பினார். இரவு 10.30 மணி அளவில் வடபழனி 100 அடி சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தார்.

 

அப்போது எதிரே மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் 3 இளைஞர்கள் வேகமாக தாறுமாறாக எதிர்திசையில் வாகனத்தை ஓட்டி வந்தனர். திடீரென அவர்கள் ஓட்டிவந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆய்வாளர் மகாலட்சுமியின் வாகனம்மீது மோதியது.

 

இதில் பெண் ஆய்வாளர் மகாலட்சுமியின் இடது கால் முட்டிக்கு கீழ் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. அடிபட்ட பெண் ஆய்வாளரை காப்பாற்றாமல் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வடபழனி போலீஸார் பெண் ஆய்வாளரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

தப்பி ஓடிய மூவரையும் சில மணி நேரத்தில் பிடித்த போலீஸார் பாண்டிபசார் போக்குவரத்து புலனாய்வு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் அரும்பாக்கம், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் விஜய்(19), தனியார் மருத்துவமனையில் டெக்னீஷியனாக பணியாற்றும், புருஷோத்தமன்(20), நெசப்பாக்கம் கானு நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரகாஷ் (21) என தெரியவந்தது. மூன்றுபேரும் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x