Published : 15 Jul 2019 03:37 PM
Last Updated : 15 Jul 2019 03:37 PM

புதிய கல்விக் கொள்கையை அரசியலாக்கிவிட்டார்கள்: பிரேமலதா 

புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி கல்வியையே அரசியலாக்கிவிட்டார்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக சென்னையில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி கல்வியையே அரசியலாக்கிவிட்டார்கள். இதுதான் உண்மை. மாணவர்களை அவர்கள் போக்கில் விடவேண்டும். தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளில் எழுதப்பட்ட அஞ்சல் துறை தேர்வில் இருந்து தமிழை நீக்கிவிட்டார்கள். 

கிராமப்புற மாணவர்களும் இளைஞர்களும்தான் அஞ்சல் தேர்வை எழுதுகின்றனர். அரசுப் பணிக்கான கனவுகளுடன் உள்ளனர். இருக்கின்ற கொள்கைகளை மாற்றுவதால் எந்தப் பயனும் இல்லை. இங்கு ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வேலையில்லாமல் உள்ளனர். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலேயே கல்விக் கொள்கையும் வேலை திட்டங்களும் இருக்கவேண்டும். ஆனால் அவற்றைத் தடை செய்வது கண்டிக்கத்தக்கது.

அந்தந்த மாநிலங்களில் பிராந்திய மொழிகளில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை என்று மாணவர்களை மீண்டும் குழப்ப வேண்டாம். கல்வியை அரசியல் ஆக்காமல் இருந்தாலே போதும். அனைத்துமே சிறந்து விளங்கும். 

உள்ளாட்சித் தேர்தலிலும் எங்களின் கூட்டணி தொடரும். வேலூர் தொகுதியில் நான், விஜயகாந்த், கட்சி நிர்வாகிகளும் பரப்புரை செய்ய உள்ளோம். கடந்த முறை நடந்த தேர்தலில் அதிக அளவு பணம் பிடிபட்டது. அவர்கள் சம்பந்தப்பட்ட வேட்பாளரைத் தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும். இப்போது மீண்டும் அதே வேட்பாளர்தான் களத்தில் உள்ளார். அதே பணப் பட்டுவாடா நடக்கிறது. அதனால் சம்பந்தப்பட்ட வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்யவேண்டும்'' என்றார் பிரேமலதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x