Published : 15 Jul 2019 11:41 AM
Last Updated : 15 Jul 2019 11:41 AM
எம்ஜிஆருக்குப் பிறகு நடிகர்கள் அரசியலில் பிரகாசிக்கவில்லை என்றும் வீண் முயற்சிகள் வேண்டாம் எனவும் ரஜினிகாந்துக்கு கே.எஸ்.அழகிரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் வேலை செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ''பொதுமக்களுக்குத் தண்ணீர் வழங்குவதில், அதிமுக அரசு மாபெரும் தோல்வி அடைந்துள்ளது. ரஜினி ரசிகர்கள் வேலூருக்குச் செல்லட்டும். வேலூர் கோட்டையைப் பார்க்கட்டும். அங்கு ஏராளமான திரையரங்குகள் இருக்கின்றன.
அங்கேபோய் ரஜினியின் லேட்டஸ்ட் திரைப்படங்களைச் சென்று பார்த்துவிட்டு வரட்டும். அதெல்லாம் அவர்கள் செய்யட்டும். நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் வேலூரில் யார் மக்களவை உறுப்பினராக வரவேண்டும் என்பதை ரஜினி ரசிகர்களால் தீர்மானிக்க முடியாது. திரைப்படத்துக்கும் அரசியலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
எம்ஜிஆருக்குப் பிறகு எந்த அரசியல் நடிகரும் அரசியல் வானத்தில் பிரகாசித்தது கிடையாது. எனவே வீண் முயற்சிகள் வேண்டாம் என்று ரஜினிகாந்த் ரசிகன் என்ற முறையில் அவருக்கு ஆலோசனை சொல்லிக் கொள்கிறேன். புத்திமதி என்று கூறமாட்டேன்'' என்றார் கே.எஸ்.அழகிரி.
வேலூர் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகமும் ரஜினியும் நீண்டகால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT