

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 7 பேர் கத்தார் நாட்டின் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர்துறையைச் சேர்ந்த வளன்(31), இரவிபுத்தன் துறையை சேர்ந்த இரவிஸ்டன் (38) ஆகியோர் தலைமையில் இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேர் பஹ்ரைன் நாட்டில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.
ஜூலை 3-ம் தேதி இவர்கள் பஹ்ரைன் நாட்டிலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கத்தார் நாட்டின் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கத்தார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். அவர்களுக்கு ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.
மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி வலியுறுத்தியுள்ளார்.