Published : 01 Jul 2015 06:55 PM
Last Updated : 01 Jul 2015 06:55 PM

தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாது: அன்புமணிக்கு மத்திய அமைச்சர் கடிதம்

தமிழகம், புதுச்சேரியின் ஒப்புதல் இன்றி காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படமாட்டாது என்று தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் அன்புமணிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அந்த மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்ப வேண்டும். அப்போதுதான் மாநிலங்களுக்கு இடையிலான கோணத்தில் ஆய்வு செய்ய முடியும் என்று கூறி விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மார்ச் 3-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் நீங்கள் எழுப்பிய பிரச்சினை, மற்றும் மார்ச் 18, ஏப்ரல் 29-ம் தேதிகளில் நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஆற்றுநீர் ஒழுங்குமுறைக் குழுவை அமைப்பதில் கர்நாடக அரசும், தமிழ்நாடு அரசும் மாறுபட்ட நிலைப்பாட்டை மேற்கொண்டிருக்கின்றன. எனவே, இதுதொடர்பான வழக்கில் 2013-ம் ஆண்டு மே 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த அறிவுறுத்தலின் அடிப்படையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில், தமிழக, கர்நாடக மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட இடைக்காலக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு மத்திய அமைச்சர் உமாபாரதி குறிப்பிட்டிருக்கிறார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x