Published : 12 Jul 2015 11:13 AM
Last Updated : 12 Jul 2015 11:13 AM
அடையாளம்பட்டுவில் உள்ள பிரதான சாலை 7 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் மக்கள் பெரும் அவதியுறுவதாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் அண்மையில் செய்தி வெளியிடப்பட்டது. இந் நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாலையை புதுப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வில்லி வாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அடையாளம்பட்டு. சென்னைக்கு மிக அருகே உள்ளதால் இந்த ஊராட்சி வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால், அடையாளம்பட்டுவின் பிரதான சாலையான பாடசாலை ரோடு மட்டும் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து, கடந்த மாதம் 10-ம் தேதி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் சார்பில், முதல் கட்டமாக, சம்பந்தப்பட்ட சாலையின் 400 மீட்டர் தூரத்தை புதுப்பிக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள இந்த பணி, இன்னும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும் என அடையாளம்பட்டு ஊராட்சி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2-ம் கட்டமாக, சாலையின் எஞ்சிய பகுதியை புதுப்பிக்கும் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி கிடைத்த உடன் தொடங்கும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT