Published : 27 Jul 2015 05:36 PM
Last Updated : 27 Jul 2015 05:36 PM

ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் வசூல் வேட்டை: விழி பிதுங்கும் பக்தர்கள்

ஆடி மாதம் என்றால் அம்மன் கோயில்களில் திருவிழா களை கட்டுகிறதோ இல்லையோ ‘பலம்’ படைத்தவர்கள் கைகளில் ‘வசூல்’ வேட்டை களை கட்டும். சிறப்பு தரிசனம், முடி காணிக்கை, காது குத்தும் காணிக்கை, ஆடு - கோழி காணிக்கை, குளியலறை மற்றும் கழிப்பறை கட்டணம், கடைகள் வைப்பதற்கான கட்டணம், வாகனங்கள் கட்டணம் என்று அனைத்து விதமான காணிக்கை மற்றும் கட்டணம் வசூலிப்பதற்கு ஏலம் விடப்படுகிறது. கோயில்களுக்கு நிதி திரட்டுகிறோம் என்ற பெயரில் நடக்கும் ‘ஏலம்’ என்பது பக்தர்களை மிகவும் வாட்டி வதைக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் நடைபெறும் காணிக்கை மற்றும் கட்டண வசூல் என்பது பக்தர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்படைய செய்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால் ஏற்றுக் கொள்ளலாம். கோயில் அமைந்துள்ள வழித்தடம் வழியாக செல்கிற வாகனங்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற வசூல் வேட்டை நீப்பத்துறை போன்ற கிராமங்களில் தங்கு தடையின்றி நடைபெறுகிறது.

முறைப்படுத்த கோரிக்கை

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, “அம்மனுக்கு முடி காணிக்கை கொடுத்து ஒரு குடும்பத்தினர் தரிசனம் செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ.1,000 வரை செலவாகிறது. ஒரு மொட்டைக்கு ரூ.100 வரை கொடுக்கிறோம். பணம் இருந்தால்தான் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த முடியும் என்ற நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கட்டண தொகை உயர்ந்து வருகிறது. அதனை வசூலிப்பவர்களிடம் கேட்டால், கூடுதல் தொகை கொடுத்து ஏலம் எடுத்துள்ளோம் என்கிறார்கள். இந்த கட்டண மற்றும் காணிக்கை கொள்ளையை முறைப்படுத்த வேண்டும்” என்றனர்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சங்கர் கூறும்போது, “இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5 வரை கட்டணம் வசூலிக்கலாம். ஆனால், ரூ.20 வரை வசூல் செய்கின்றனர். மொட்டை அடிப்பதற்கு ரூ.50 முதல் ரூ.100 என்று கட்டணம் வசூலிக்கின்றனர். அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்துவிட்டு மொட்டை அடித்துக்கொண்ட பிறகு, மொட்டை அடித்தவருக்கு ரூ.50 பணம் கொடுக்க வேண்டும். அனைத்து கோயில்களிலும் இலவச தரிசனம் வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஆனால், சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றனர்.

கோயில்களுக்கு நிதி என்ற பெயரில் நடக்கும் கொடுமைக்கு முடிவுகட்ட வேண்டும். புதூர் மாரியம்மன் கோயிலில் சாலையில் கடை வைப்பதற்கு ரூ.2,500 வசூலித்துள்ளனர். விதவிதமாக கட்டணம் வசூலிக்கிறார்கள். ஏலம் என்பது நேர்மையாக நடைபெறவில்லை. திட்ட பணிகளுக்கு ஏலம் எடுப்பதில் நடைபெறும் முறைகேடு போன்றுதான், கோயில் திருவிழா ஏலத்திலும் நடைபெறுகிறது. முழுமையான தொகை கோயிலுக்கு சென்றடையவில்லை. அம்மன் பெயரை சொல்லி நடைபெறும் வசூல் வேட்டையை தடுக்க இந்து சமய அறநிலையத் துறை முன் வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x