Published : 28 Jul 2015 08:41 AM
Last Updated : 28 Jul 2015 08:41 AM

தியேட்டருக்கு வெடிகுண்டு மிரட்டல்: மது போதையில் இருந்த 2 இளைஞர்கள் கைது

எழும்பூரில் உள்ள தியேட்டருக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலையில் பேசிய நபர், எழும்பூரில் ஒரு தியேட்டரில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சில மணி நேரங்களில் அது வெடிக்கும் என்றும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்றும் கூறினார். தொடர்ந்து 19 முறை போன் செய்தவர், தொடர்ந்து அதே தகவலை கூறிக் கொண்டே இருந்தார்.

அதைத் தொடர்ந்து எழும்பூர் போலீஸார் மோப்ப நாய் உதவியுடன் தியேட்டருக்கு சென்று சோதனை நடத்தினர். தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு எவ்விதமான இடையூறும் செய்யாமல் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து போன் செய்து, போலீஸாரை அலைக்கழித்த இளைஞரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீஸார் இறங்கினர். மிரட்டல் ஆசாமி தனது செல்போனில் இருந்தே பேசி இருப்பது தெரிந்தது. அந்த செல்போன் நம்பரை வைத்து நடத்திய விசாரணையில், வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரியை சேர்ந்த இரணியன் என்பவரின் செல்போனில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இரணியனையும் அவரது நண்பர் சரவணனையும் போலீஸார் நேற்று இரவில் பிடித்தனர். விசாரணையில், இருவரும் மது போதையில் மிரட்டல் விடுத்தது தெரிந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x