Last Updated : 16 Jul, 2015 06:11 PM

 

Published : 16 Jul 2015 06:11 PM
Last Updated : 16 Jul 2015 06:11 PM

தவறாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 4 பேருக்கு ரூ.16 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவு

கொலை செய்யப்பட்டதாக கூறப் பட்டு, உயிருடன் திரும்பிய பெண் வழக்கில் தவறாக கைதான 4 பேருக்கு ரூ.16 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூரை சேர்ந்த முத்து- கன்னிமரியாள் தம்பதி மகள் மேகலா. இவர் 3 வயது சிறுமியாக இருந்தபோது, கன்னிமரியாள் கணவரை பிரிந்து மேகலாவுடன் திருப்பூர் சென்றார். அங்கு தன்ராஜ் என்பவருடன் கன்னிமரியாள் வாழ்ந்தார். திருப்பூரில் ஆனந்தன் என்பவருடன் மேகலாவுக்கு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால் மேகலா, பேரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். 10 நாளில் அங்கிருந்து யாரிடமும் தெரிவிக்காமல் சென்னை சென்றார். மேகலாவை காணவில்லை என கணவர் ஆனந்தன் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித் தார்.

இந்நிலையில், முறப்பநாடு காவல் சரகம் வல்லக்குளத்தில் 2002-ல் இளம் பெண் ஒருவரது சடலம் எரிந்த நிலையில் கிடந்தது. அவர் மேகலா என்றும், அவரை கொலை செய்து எரித்ததாக மேகலாவின் உறவினர்கள் கோவில்பிள்ளை, பாலசுப்பிரமணியன், குருந்தன் என்ற ஜெயக்குமார், தாசன் ஆகியோரை முறப்பநாடு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் கொலை செய்யப்பட்டது மேகலாதான் என்பதை உறுதி செய்தது.

இருப்பினும் குற்றச்சாட்டு சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி கோவில்பிள்ளை உட்பட 4 பேரும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மேகலா, 8.2.2011-ல் பேரூருக்கு உயிருடன் வந்தார். அவரை பார்த்து ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது தான் அவரை கொலை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்ட விவரம் அவருக்கு தெரியவந்தது. இதை யடுத்து தூத்துக்குடி ஆட்சியரை சந்தித்து தான் உயிருடன் இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே, மேகலாவை கொலை செய்ததாக கைதான கோவில்பிள்ளை உள்ளிட்ட 4 பேரும் இழப்பீடு கேட்டும், தங்களை தவறாக கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, உயிருடன் வந்திருப்பது மேகலாதானா என்பதை கண்டறிய, அவருக்கும் அவரது தந்தை முத்துவுக்கும் மரபணு சோதனை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேகலாவுக்கும், அவரது தந்தை முத்துவுக்கும் நடத்தப்பட்ட மரபணு சோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், நீதிமன்றத்தில் ஆஜரான மேகலா, முத்துவின் மகள்தான் எனக் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மேகலா, முத்து, தன்ராஜ், ஆனந்தன் உட்பட 7 பேரிடம் நீதிபதி விசாரணை நடத்தி னார். பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கொலையானவர் மேகலா என்று கூறி நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்த அனைத்து ஆவணங் களும் ரத்து செய்யப்படுகின்றன. மண்டை ஓட்டு பரிசோதனை அடிப்படையில் இறந்தவர் மேகலா என்ற முடிவுக்கு போலீஸார் வந்துள்ளனர்.

இதனால் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது. எரிந்த நிலையில் சடலமாக கிடந்த பெண் யாரென்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக அந்த வழக்கை டிஎஸ்பி தர்மலிங்கம் விசாரித்து கொலை செய்யப்பட்ட பெண் யாரென்பதையும், கொலையாளி களையும் கண்டுபிடிக்க வேண்டும். தவறாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் தலா ரூ.4 லட்சத்தை தமிழக அரசு 2 மாதத்தில் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

போலீஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு

இந்த வழக்கில் மேகலாவுக்கு விரைவில் மரபணு சோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ததற்காக தூத்துக்குடி எஸ்பி அஸ்வின் கோட்னீஸ், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா, முறப்பநாடு காவல் ஆய்வாளர் பெர்னார்டு சேவியர், காவல் ஆய்வாளர் ஹரிகரன், முறப்பநாடு சார்பு ஆய்வாளர் கந்தசாமி ஆகியோரையும், குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சுபாஷ்பாபு, இளங்கோ, ஆனந்த் மனுதாரர் வழக்கறிஞர் அழகுமணி, கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், அரசு வழக்கறிஞர்கள் ரமேஷ், மயில்வாகன ராஜேந்திரன் ஆகியோரை இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி செய்ததற்காக பாராட்டுவதாக உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x