Published : 14 Jul 2015 08:05 PM
Last Updated : 14 Jul 2015 08:05 PM

இசைத் தாயின் இனிய மகன் எம்.எஸ்.வி: நடிகர் சங்கம்

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் ஆர்.சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

இசைத் தாயின் இனிய மகன். தமிழ்த் திரையுலகின் காலத்தால் அழிக்க முடியாத பல அற்புத பாடல்களின் படைப்பாளி. புராண, வரலாற்று படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் இசையமைப்பாளராக திரையுலகில் அடியெடுத்து வைத்து, கேட்போர் மனம் மயங்க வைக்கும் மெல்லிசை என்கிற புதிய பாணியை படைத்து, தமிழ் கூறும் நல்லுலகிலெல்லாம் நாத வெள்ளத்தை இன்ப கடலாக அலையடிக்க வைத்தவர். மெல்லிசை மன்னர் என்று எல்லோராலும் போற்றப்பட்டவர். கலை மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமல்ல, இந்திய திரையுலகிற்கே ஈடில்லாத இழப்பு.

இந்த தருணத்தில் அந்த கலை மாமேதையின் மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அவரோடு பணியாற்றியவர்களுக்கும், அவர் இசையில் நனைந்து இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து ரசிகர் பெருமக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x