Published : 08 Jul 2015 03:47 PM
Last Updated : 08 Jul 2015 03:47 PM

மதுவை கொண்டு வந்ததுதான் அதிமுக, திமுக ஆட்சிகளின் சாதனை: அன்புமணி ராமதாஸ் கிண்டல்

தமிழகத்தில் மதுவை விற்பனைக்கு கொண்டுவந்ததுதான் அதிமுக, திமுக ஆட்சிகளின் சாதனை என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.

பாளையங்கோட்டையில் பாமக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

முதல்வர் என்பவர் பொதுமக்களுக்கு வேலை செய்கிற வேலைக்காரன். ஆனால் தமிழகத்தில் முதல்வர் என்பவர், தெய்வமாக போற்றப்படுகிறார். இந்நிலையை திராவிட கட்சிகள்தான் ஏற்படுத்தியுள்ளன. தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு தேவையான எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. ஊழல் மட்டும்தான் நடந்து உள்ளது.

ஜாதி வாரி கணக்கெடுப்பை முழுமையாக வெளியிட வேண்டும். தென்தமிழக முன்னேற்றத்துக்கு சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மதுவை கொண்டு வந்து இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் திணித்து அவர்களை கெடுத்ததுதான் திமுக, அ.தி.மு.க. அரசுகளின் சாதனை.

ஒரு சிறுவனை மது குடிக்க வைக்கும் செயல் தமிழகத்தில் நடைபெறுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம். வேலை வாய்ப்புகளை பெருக்குவோம். விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்றார் அவர்.

மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.நிஸ்தார் அலி தலைமை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் அரிகரன் வரவேற்றார்.

மாநில பொதுச்செயலாளர் ராவணன், மாநில துணைத் தலைவர்கள் பிச்சையா பாண்டியன், குருநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளர் சுகுமார் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x