Last Updated : 03 Jul, 2015 09:12 AM

 

Published : 03 Jul 2015 09:12 AM
Last Updated : 03 Jul 2015 09:12 AM

அரியலூர் அருகே உள்ள சிவன் கோயிலை சேர்ந்த ரூ.6.3 கோடி மதிப்புள்ள மாணிக்கவாசகர் சிலை அமெரிக்காவில் மீட்பு

அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தான் கோயிலுக்குச் சொந்தமான 11-ம் நூற்றாண்டை சேர்ந்த மாணிக்க வாசகர் வெண்கல சிலை அமெரிக் காவில் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.6.3 கோடியாகும். கடத்தல் சிலை என தெரிந்ததால் இச் சிலையை வாங்கியவரே அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைத் துள்ளார்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஆயிரக்கணக்கான பாரம் பரிய கோயில்களும் அவற்றில் பழங்கால ஐம்பொன் சிலைகள், கற்சிலைகள் உள்ளன. பல்வேறு கோயில்களில் இருந்து இந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத் தப்பட்டுள்ளன. அந்த சிலைகளை அவ்வப்போது போலீஸார் மீட்டு வருகின்றனர். அந்த சிலைகளின் தொன்மை மற்றும் உண்மைத் தன்மையை அறிவதில் புதுச்சேரி யிலுள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் முக்கியமாக உதவி செய்து வருகிறது.

புகைப்பட ஆதாரம்

ஏனெனில், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு பிரெஞ்சு ஆய்வு நிறுவன குழுவினர் சென்று புகைப்பட ஆய்வு நடத்தி ஒரு லட்சத்து 50 ஆயிரம் சிலைகளின் அரிய புகைப்படங்கள், அவற்றுக் கான உரிய ஆதாரங்களை இந்நிறு வனத்தில் பாதுகாத்து வருகின்றனர். இந்த அரிய புகைப்பட சேகரிப்பு பணியை 1956 முதல் பிரெஞ்சு நிறுவன குழு செய்கிறது. இங்குள்ள புகைப்பட ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு தான் தமிழகத்தில் ஸ்ரீ புரந்தன் கிராமத்தில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் நேஷனல் கேலரியில் இருப்பது தெரிந்தது. மேலும், இந்த கோயிலில் இருந்து கடத்தப்பட்ட உமாமகேஷ்வரி சிலையும் சிங்கப்பூரில் இருப்பது தெரிந்தது.

கடத்தல் கும்பல்

இது தொடர்பாக விசாரித்த போது, அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தான் கோயிலில் இருந்து நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை உள்பட 25-க்கும் மேற்பட்ட சிலைகளை சுபாஷ் சந்திர கபூர் தலைமையிலான கும்பல் கடத்திச் சென்று வெளிநாடுகளில் விற்பனை செய்தது தெரிந்தது. எனவே, சுபாஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் நடராஜர் உள்ளிட்ட சிலைகள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், இதே கோயிலி லிருந்து திருடப்பட்ட வெண்கலத் தினாலான மாணிக்கவாசகர் சிலை தற்போது அமெரிக்காவில் மீட்கப் பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இந்த சிலையின் மதிப்பு ரூ.6 கோடியே 30 லட்சமாகும். இது குறித்து அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ஐசிஇ) அதிகாரிகள் கூறும்போது, “கடத்தல் சிலைகளை விற்பனை செய்பவர்களால் ஏமாற்றப்பட்ட பழங்கால சிலை சேகரிப்பாளர் ஒருவர், 11-12ம் நூற்றாண்டின் சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த வெண்கல சிலையை தானாக முன்வந்து தந்தார்.

இதையடுத்து, கலாச்சார சொத்து பிரிவின் மத்திய நிறுவனத் தினர் இந்த சிலையை ஆய்வு செய் தனர். அப்போது, இந்த சிலையா னது தமிழகத்திலுள்ள அரியலூர் மாவட்டம் ஸ்ரீ புரந்தான் கோயிலில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது” என்றனர்.

ஐசிஇ தரப்பானது, கடந்த 3 ஆண்டுகளாக நடத்திய விசாரணை யில் ஏராளமான சிலைகளை கைப் பற்றியுள்ளது. தற்போது, மீட்கப் பட்ட வெண்கலத்தால் செய்யப் பட்ட மாணிக்கவாசகர் சிலையின் புகைப்படங்களையும் `தி இந்து’ வுக்கு நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் அளித்துள்ளது.

2,500 சிலைகள் மீட்பு

இந்த சிலை குறித்து ஐசிஇ தரப்பில் கூறும்போது, "மாணிக்க வாசகர் சிலையை கடந்த 2006-ல் 6.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரை யிலான டாலர்கள் அளித்து சிலை சேகரிப்பாளர் வாங்கியுள்ளார். அவரிடம் சிலை திருடுபோனதற்கு முன்பாக ஒரு தேதியை பொய்யாக தெரிவித்து சிலையை கடத்தல் கும்பல் விற்றுள்ளது. கபூர் தரப்பு இதேமுறையை கையாண்டு வருகிறது. இதுவரை 2,500க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 100 மில்லியன் டாலர். சில சிலைகள் ஏற்கெனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளன. மேலும் பல சிலைகள் நியூயார்க் கிடங்கில் வைக்கப் பட்டுள்ளது. அவற்றை திருப்பி அளிப்பதில் சட்டச்சிக்கல், நடை முறை சிக்கல்கள் உள்ளன. சிலைக்கடத்தலில் ஈடுபட்ட கபூர் தற்போது தமிழக சிறையில் இருப்பதும் விசாரணை நடப்பதும் ஆறுதலான விஷயம். மேலும் கடத்தல் சிலைகளை மீட்பதில் இந்திய-அமெரிக்க அதிகாரிகள் பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். கடத்தல் சிலைகளை வாங்கிய சிலை சேகரிப்பாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் திருப்பிதர முன்வருவதில்லை. கடந்த 3 மாதத்தில் 2 மியூசியத்திலிருந்து சிலைகளை ஒப்படைக்க முன் வந்தனர்” என்று தெரிவித்தனர்.

கலாச்சார திருட்டு

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப் புத் துறையைச் சேர்ந்த சிறப்பு பாது காப்பு நிபுணர் ரேமண்ட் பார்மர் கூறுகையில், "அடுத்த நாட்டின் கலாச்சார திருட்டு மோசமானது. நாட்டின் தேசிய பாரம்பரியம் திருட்டு போவது மோசமான குற்றம். தற்போது மாணிக்கவாசகர் சிலையை திருடப்பட்டது என அறிந்த தும் அதை வாங்கியவரே முன்வந்து அளித்ததை பாராட்டுகிறோம்" என்று குறிப்பிட்டார்.

இந்திய தூதரக அதிகாரி தியானேஷ்வர் மூலே கூறும்போது, “அமெரிக்க உள்நாட்டு பாதுகாப் புத்துறையும் இந்திய அரசின் சட்ட அமலாக்கப்பிரிவும் இணைந்து கடத்தப்பட்ட சிலைகளை முழுவதும் மீட்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் மீட்கப்பட்ட மாணிக்கவாசகர் சிலையை அடையாளம் கண்டது தொடர்பாக புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர் முருகேசன், புதுச்சேரியில் `தி இந்து’விடம் கூறும்போது, "அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையை சேர்ந்த முதுநிலை பாதுகாப்பு நிபுணர் பிரெண்டன் எம். ஈஸ்டர், பாதுகாப்பு நிபுணர் ஜான்பால் லப்பாட் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பரில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்துக்கு வந்தனர். அப்போது, புதுச்சேரியில் எங்கள் நிறுவனத்தில் உள்ள சிலைகளின் புகைப்படங்களை ஆய்வு செய்த னர். மேலும், இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட ஐம்பொன் சிலைகளில் நர்த்தன சம்பந்தர், கணபதி உட்பட முக்கிய சிலைகளின் புகைப்பட ஆவணங்களை காண்பித்து சரி பார்த்தனர்.

சிலை கடத்தல் விவ காரத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ள இணைந்து செயல்படவும் திட்டமிட்டிருந்தனர். தற்போது மீட் கப்பட்ட ஸ்ரீ புரந்தான் கோயிலுக்கு சொந்தமான மாணிக்கவாசகர் சிலையை புதுச்சேரி வந்த அமெரிக்க அதிகாரிகள் தான் காண்பித்தனர். மேலும், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத் தரப்பில் இருந்து வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

நாடு கடந்த புராதன சிலைகள்

சைவ சமய குரவர்கள் நால்வரில் குறிப்பிடத்தக்கவர் திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர். சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் கும்பலால் அரியலூர் மாவட்டத்தின் புராதன ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்டபோது அவற்றோடு மாணிக்கவாசகரின் வெண்கல சிலையும் களவு போனது.

அரியலூர் ஏன்?

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த சுபாஷ்கபூர் குடும்பம் பாரம்பரியமாக இந்திய கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்து அமெரிக்கா உள்ளிட்ட அயல் நாடுகளில் விற்று வந்தது. கைவினைப் பொருட்களைவிட புராதன சிலைகளில் கொள்ளை லாபம் கிடைப்பதை அறிந்ததும் அந்த போர்வையிலேயே இந்தியாவிலிருந்து சிலைகளைக் கடத்த தொடங்கினார் சுபாஷ்கபூர். தொழில் மாறியது. லாபத்தை அதிகரிக்க சிலை திருட்டில் நேரடியாக சுபாஷ்கபூர் கும்பல் அடுத்து இறங்கியது.

இந்தவகையில் பாரம்பரியமும், புராதனமும் மிக்க கடவுளர் சிலைகள் நிறைந்த அதேசமயம் பாதுகாப்புக் குறைவான அரியலூர் மாவட்டம் கபூர் கும்பலுக்கு வசதியானது. உடையார்பாளையம் வட்டாரத்தில் புரந்தான், சுத்தமல்லி உள்ளிட்ட கோயில்களில் இருந்து ஐம்பொன் கடவுளர் சிலைகள் இந்தவகையில் அடுத்தடுத்து களவு போயின.

இதர சிலைகளும் மீட்கப்பட வேண்டும்

ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்கப்பட்ட ரூ.32 கோடி மதிப்பிலான நடராஜர் ஐம்பொன் சிலையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வந்த சிலை கடத்தல் தடுப்பு டிஎஸ்பி அசோக் நடராஜன் கூறுகையில், “இந்த சிலையுடன் சேர்ந்து களவுபோன 7 சிலைகளில், அமெரிக்காவில் 3, சிங்கப்பூரில் 1 என அவற்றின் தற்போதைய இருப்பிடங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. விரைவில் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

சுபாஷ் கபூர் வழக்கு

2011-ல் இன்டர்போல் உதவியுடன் ஜெர்மனி ஃப்ராங்க்பர்ட்டில் கைது செய்யப்பட்ட சுபாஷ்கபூர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் மாவட்டத்தின் சிலை திருட்டு மற்றும் கடத்தல்கள் தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இவ்வழக்கில் கடந்த செப்டம்பரில் சுபாஷ்கபூர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன. மற்றபடி சுபாஷ்கபூர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜராவதும் அவருக்கான காவல் நீட்டிப்புமே இதுவரை நடந்து வந்துள்ளது.

ஆஸி.யில் மீட்கப்பட்ட நடராஜர்

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட் இந்தியா வந்தபோது அவருடன் ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட 2 இந்திய புராதன சிலைகள் வந்தன. ஸ்ரீபுரந்தான் நடராஜர் மற்றும் விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர் சிலைகள் தமிழகம் கொண்டுவரப்பட்டு ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. ஸ்ரீபுரந்தான் கிராம மக்கள் கண்ணீர் விட்டு கோரிக்கை விடுத்தும், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு நடராஜர் சிலை, குடந்தை சிலைகள் காப்பகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இருந்தபோதும் சட்டப்படி போராடி, ஸ்ரீபுரந்தான் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலையை அக்கிராம மக்கள் வணங்கி மகிழ்ந்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x