

நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிராக சென்னையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், குடிசை பகுதி மக்கள், கடலோர மக்களுக்கான அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மேதா பட்கர் பேசியதாவது:
பாஜக அரசின் புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் படி சமூக தாக்க மதிப்பீடு, பெரும்பாலான மக்களின் ஒப்புதல் ஆகியவை தேவை இல்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த சட்டம் கூட தனியாருக்கு நிலத்தை கொடுப்பதை தடுத்தது. ஆனால் இந்த சட்டத்தில் அது போன்ற பாதுகாப்புகள் இல்லை. இதைப் பற்றி விவாதிக்க ஜூலை 23-ம் தேதி டெல்லியில் தேசிய பொது விசாரணை நடத்தப்படும்.
இந்த பிரச்சினையில் தென்னிந்தியாவின் குரல் முக்கியமானது. திமுக, அதிமுக ஆகியவை இதில் தங்களின் நிலைப்பாட்டை விளக்கவேண்டும். பாஜக அரசுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொள்ளுமா இல்லையா என்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு. ஆனால் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் தொடர்பான பிரச்சினையில் விவசாயிகளுடனும், தொழிலாளர் களுடனும் அதிமுக இருக்கிறதா என்பதை ஜெயலலிதா விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, ‘‘மோடி அரசு நில பறிப்பு சட்டத்தை மூன்று முறை அவசர சட்டம் மூலமாக கொண்டு வந்துள்ளது. மண்ணின் மைந்தர்களிடமிருந்து நிலத்தை பறித்து தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்குகிறது. கவுரவ கொலை வழக்குகளில் அரசியல் கட்சிகளின் மவுனம் ஆபத்தானது’’ என்றார்.
இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பாக்கியம், மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் ஆகியோர் கலந்து கொண்டு நில கையகப்படுத்துதல் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இக்கூட்டத்துக்கு பிறகு தமிழக ஆளுநரை சந்தித்த மேதா பட்கர், நிலம் கையகப்படுத்தல் தொடர்பான சட்டத்தை திரும்பப் பெறக்கோரும் மனுவை அளித்தார்.