Last Updated : 18 Jul, 2015 08:19 AM

 

Published : 18 Jul 2015 08:19 AM
Last Updated : 18 Jul 2015 08:19 AM

திருச்சி எரிவாயு தகன மயானத்தில் உள்ள முழுமையாக எரிக்கப்படாத சடலம் யாருடையது?- டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்ப முடிவு

திருச்சி கருமண்டபம் எரிவாயு தகன மயானத்தில் கடந்த 15-ம் தேதி உடலை எரியூட்டாமலேயே அஸ்தியைக் கொடுத்தது தெரிய வந்ததால், மயானம் சூறையாடப் பட்டது. இதையறிந்து, ஜூலை 14-ம் தேதி இங்கு தகனம் செய்ய கருமண்டபம் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த சங்கரின் சடலத் தைக் கொண்டுவந்த அவரது உறவினர்கள் அங்கு வந்து, சங்க ரின் அஸ்திதான் என டிஎன்ஏ பரிசோதனை செய்து உறுதிப் படுத்திவிட்டு தருமாறு வலியுறுத் தினர்.

இந்த நிலையில், நேற்று சங்கரின் மகன் சதீஸ் உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜங்ஷன் பகுதி செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமையில், நேற்று எரிவாயு தகன மயான நுழைவுவாயில் முன் அமர்ந்து, இந்தப் பிரச்சினையில் விரிவான விசாரணை நடத்த வேண் டும் என்று போராட்டத்தில் ஈடுபட் டனர்.

தகவலறிந்து, வந்து பேச்சு வார்த்தை நடத்திய மாநகராட்சி உதவி ஆணையர் (பொறுப்பு) எஸ்.கண்ணன், செய்தியாளர்களிடம் கூறியபோது, “திருச்சி மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் பெயரில்தான் மயானத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தம் உள்ளது. இங்கு நடைபெற்ற மோசடி குறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். எரி வாயு தகன மேடை அருகில் கிடப்பது எரிக்கப்பட்ட உடல்களின் மிச்சம் மட்டுமே” என்றார்.

பின்னர், அங்கு வரவழைக் கப்பட்ட மாநகராட்சி நகர் நல அலு வலர் (பொறுப்பு) என்.ராஜேஸ்வரி, பூட்டிக் கிடந்த எரிவாயு தகன மேடையைத் திறந்து, முழுமையாக எரிக்கப்படாமல் 3 நாட்களுக்கு முன் கிடந்த சடலம் அப்படியே இருப்பதைப் பார்த்தார்.

பின்னர் அவர் கூறியபோது, “இதனை டிஎன்ஏ பரிசோத னைக்கு அனுப்ப முடியுமா என்று தடய அறிவியல் துறை மூலம் ஆய்வு செய்து, பரி சோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அலுவலர்கள் அலட்சியம்

தாங்கள் தப்பித்துக்கொள்ள தொடர்ந்து எரிவாயு தகன மேடை ஊழியர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினரை கைகாட்டுவது மாநகராட்சி அலுவலர்களின் அலட்சிப்போக்கையே காட்டுவதாக இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

எந்த நிலையிலான உடலை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்ப முடியும் என்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் கார்த்திகேயனிடம் கேட்டபோது, “சாம்பலை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்ப முடியாது. வேகாத எலும்பு மஜ்ஜை, முடி, பல், நகம் ஆகியவற்றின் மூலம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடியும்” என்றார்.

இந்நிலையில், தங்களுக்கும், மயான பராமரிப்புக்கும் சம்பந்தமே இல்லை என்று திருச்சி மிட் டவுன் ரோட்டரி சங்கம் மாநகராட்சி ஆணையருக்கு நேற்று விளக்கக் கடிதம் அனுப்பியது.

இதற்கிடையே மயான ஊழியர் குமார் சேலம், ஈரோடு மாவட்ட பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய தனிப்படை போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.

500 சடலங்கள் எங்கே?

2008 இறுதி முதல் இப்போது வரை சுமார் 3,199 சடலங்கள் இங்கு எரியூட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சி உதவி ஆணையர் (பொறுப்பு) கண்ணன் நேற்று தெரிவித்தார். ஆனால், இந்த மயானத்துக்கு கடைசியாக கொண்டுவரப்பட்ட சடலத்துக்கு அளிக்கப்பட்ட ரசீது எண் 2,601. இந்தக் கணக்கில் 500-க்கும் அதிகமாக வித்தியாசம் இருப்பதால், அந்த சடலங்களின் நிலை என்ன ஆனது என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x