Published : 25 Jul 2015 08:33 AM
Last Updated : 25 Jul 2015 08:33 AM

ஹெல்மெட் அணிவதில் உள்ள நடைமுறை சிரமங்கள் கருத்தில் கொள்ளப்படும்: உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கருத்து

ஹெல்மெட் அணிவதில் பொதுமக்களுக்கு உள்ள நடைமுறை சிரமங்கள் கருத்தில் கொள்ளப் படும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கூறினார்.

தமிழகத்தில் ஹெல்மெட் கட்டாய உத்தரவு கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்தது. ‘ஹெல்மெட் கட்டாய உத்தரவால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு அளித்து ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பலரும் முறையிட்டனர். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதம்:

உயர் நீதிமன்ற வழக்கறி ஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ்:

ஹெல்மெட் கட்டாயம் என்ற பொதுவான உத்தரவால், இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து செல்வோர் என அனைவரையும் போலீஸார் பிடித்து துன்புறுத்து கின்றனர். பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள், குழந்தைகள், மெய் வழிச்சாலை சமூகத்தினர், சீக்கியர்களுக்கு விலக்கு அளித்து ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நடைமுறைப் படுத்த அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். மிகவும் உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளி களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.

வழக்கறிஞர் எம்.வேல்முருகன்:

தமிழகத்தில் 1 கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 140 இருசக்கர வாகனங்கள் உள்ளன. ஹெல்மெட் கட்டாயம் உத்தரவு குறுகிய காலத்தில் அமல்படுத்தப்பட்டதால், அதன் தேவை அதிகரித்துவிட்டது. அந்த அளவுக்கு சப்ளை இல்லை. எனவே, ஹெல்மெட் கட்டாயம் உத்தரவை அமல்படுத்த காலநீட்டிப்பு வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை போலீஸார் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க உத்தரவிட வேண்டும்.

மதுரை வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் சங்கர நாராயணன்:

தங்கள் (நீதிபதி கிருபாகரன்) உத்தரவால் குற்றாலம் தூய்மையானது. வைகை ஆற்றுநீர் கடைகோடி மக்களுக்கும் கிடைக்கிறது. சமூக விரோதிகள் வழக்கறிஞராவது தடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி தங்களது பல உத்தரவுகள் கீரிடம்போல விளங்குகின்றன. அதேபோல, ஹெல்மெட் விஷயத்தில் பொதுமக்களை போலீஸார் துன்புறுத்துவதை தடுக்க உத்தரவிட வேண்டும்.

நீதிபதி:

பொதுமக்களை போலீஸார் துன்புறுத்துவதாக வழக்கறிஞர்கள் புகார் கூறுகின்றனரே?

கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன்:

அப்படி எதுவும் இல்லை. ஏதாவது இருந்தால் குறிப்பிட்டு சொல்லலாம்.

இவ்வாறு வாதம் நடந்தது. இதையடுத்து, ‘ஹெல்மெட் அணிவதில் பொதுமக்களுக்கு இருக்கும் நடைமுறைச் சிரமங்கள் கருத்தில் கொள்ளப்படும்’ என்று கூறிய நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x