Published : 29 Jul 2015 08:34 AM
Last Updated : 29 Jul 2015 08:34 AM
சொத்துவரியை ஆன்லைன் மூலம் சுய மதிப்பீடு செய்யும் திட்டம் சென்னை மாநகராட்சியில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான தீர்மானம் அடுத்த மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மின் ஆளுகை திட்டத்தை அமல் படுத்த சென்னை மாநகராட்சி தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆன் லைன் மூலம் சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துவது, பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள், சாலை வெட்ட அனுமதி, கட்டிட அனுமதி ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பது, சமூக நலக்கூடம் பதிவு செய்வது உள்ளிட்ட சேவைகளை பெறலாம். தற்போது ஆன்லைன் மூலம் சொத்து வரியை சுய மதிப்பீடு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தற்போதுள்ள நடைமுறை
சொத்துகளை மதிப்பீடு செய்வதற் கான விண்ணப்பம், வரி செலுத்து வோரிடமிருந்து பெறப்படும். அந்த விண்ணப்பங்கள் வரி மதிப் பீட்டாளர்களால் சரிபார்க்கப்பட்டு, விண்ணப்பதாரரின் சொத்து ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும். அதன்பிறகு அதிகார வரம்புக்கு உட்பட்டு, இணை ஆணையர், வருவாய் அலுவலர், துணை வருவாய் அலுவர், அல்லது மண்டல அலுவலர் சொத்துகளை மதிப்பீடு செய்வார்கள். அதன் பிறகு தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழு ஒப்புதல் தரவேண்டும். இதன் பிறகே, மதிப்பீட்டு ஆணை வழங்கப்பட்டு விண்ணப்பித்தவர் வரி செலுத்த முடியும்.
சுய மதிப்பீடு
சுய மதிப்பீட்டு முறையில் சொத்து வரி செலுத்துவோர் ஆன்லைனில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த விண்ணப்பத்தில் சொத்துகள் எங்குள்ளன என்ற முகவரி மற்றும் சொத்துகளின் விவரங்களை பதிவிட வேண்டும். சொத்து விவரங்களுக்கு ஏற்றவாறு மதிப்பீட்டு ஆணை உடனடியாக ஆன்லைனில் தயார் செய்யப்படும். அதைக் கொண்டு ஆன்லைன் மூலமாகவோ, வேறு வழிகளிலோ வரி செலுத்தலாம்.
கண்காணிப்பு ஏற்பாடு இல்லை
இதுகுறித்து மாநகராட்சி அதி காரி கூறும்போது, “சென்னை மாநகராட்சியில் சொத்து மதிப் பீட்டாளர்கள் 100 பேர் உள்ளனர். 200 வார்டுகளில் சொத்துகளை மதிப்பீடு செய்ய இவர்களால் முடியும். எனினும் அனைத்தையும் ஆன்லைன் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால், வரி மதிப்பீட்டை கண்காணிக்கும் ஏற்பாடுகள் எதுவும் இதுவரை முடிவு செய்யப்படவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT