Last Updated : 13 May, 2014 09:22 AM

 

Published : 13 May 2014 09:22 AM
Last Updated : 13 May 2014 09:22 AM

அர்ச்சனா ராமசுந்தரம் விவகாரத்தில் நடப்பதென்ன?

தமிழகத்தின் காவல்துறை தலைவர் அந்தஸ்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய அரசின் ஆணையை ஏற்று சி.பி.ஐ. கூடுதல் இயக்குநராக மே 7-ம் தேதி பதவியேற்றதும், தமிழக அரசால் இடைநீக்கம் செய்யப்பட்டார். காரணம், தமிழக அரசிடமிருந்து விடுவிப்பாணை பெறாமல் மத்திய அரசில் சேர்ந்துவிட்டார் என்பதற்காக.

அர்ச்சனாவை தேர்வு செய்தது இப்போது சர்ச்சைக்கு இடமாகி விட்டது. மத்திய ஊழல் கண் காணிப்பு ஆணையம் (சி.வி.சி.), இந்தப் பதவிக்கு 3 பெயர்களை பரிந்துரைத்திருக்க வேண்டும். ஆனால், ஆர்.கே.பச்நந்தா என்ற ஒருவரின் பெயரை மட்டும் அது பரிந்துரைத்தது. பச்நந்தா, அர்ச்சனாவைவிட பதவி அனுபவத்தில் 3 ஆண்டுகள் இளை யவர்.

மத்தியப் புலனாய்வுக் கழக நிர்வாகப் பிரிவின் பணியாளர் துறை 5 பெயர்களை அளித் தும், ஒரு பெயர் மட்டுமே பரிந்து ரைக்கப்பட்டிருந்தது. அர்ச்சனா மட்டுமே ஒரே பெண் அதிகாரி, பதவி அனுபவத்தில் மிகவும் மூத்தவர். மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, சி.வி.சி.யின் பரிந்துரையை நிராகரித்துவிட்டு அர்ச்சனாவைத் தேர்ந்தெடுத்தது.

மத்திய மாநில அரசுகளின் மோதல்

மத்திய, மாநில அரசுகளின் மோதலில் அர்ச்சனா சிக்கியிருக்கி றார் என்பதுதான் இப்போது கவனிக்கப்பட வேண்டியுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் 256, 257 ஆகிய இரண்டு பிரிவுகளுமே, ‘மத்திய அரசின் நிர்வாக அதிகாரத்துக்குத் தடையாகவோ, பாரபட்சப்படுத்தும் வகையிலோ மாநில அரசின் நிர்வாகம் செயல் படக்கூடாது’ என்று கூறுவதை சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சி.பி.ஐ. பதவிக்கு விண்ணப்பிக்க அர்ச்சனாவுக்கு அனுமதி தந்துவிட்டு, நியமன ஆணை வந்த பிறகும் அனுமதிக்காமல் இருந்து விட்டு, பதவியேற்றதும் இடை நீக்கம் செய்வது அரசியல் சட்டப் பிரிவுகளை எதிர்ப்பது போலாகிவிடும் என்கின்றனர்.

பிற மாநிலங்களைப் போலவே தமிழகமும் தன்னுடைய மூத்த அதிகாரியை விட்டுத்தர மன மில்லாமல் இருக்கிறது. விட்டுத்தர முடியாத அளவுக்கு அனுபவமும் திறமையும் உள்ள மூத்த போலீஸ் அதிகாரியை ஏன் முக்கியத்துவம் இல்லாத பதவியில் தமிழக அரசு வைத்திருந்தது என்று கேட்கிறார் சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன்.

மத்திய அரசு, மாநில அரசுகள் இரண்டிலும் பணிபுரியத்தான் அனைத்திந்திய சிவில் சர்வீஸ் சேவைப்பிரிவு தொடங்கப்பட்டது என்று சுட்டிக்காட்டும் வட இந்தியப் பிரிவு மூத்த அதிகாரி ஒருவர், “மாநிலங்களில் பணியாற்றி கள அனுபவம் பெற்ற அதிகாரிகள் மத்திய அரசில் சேர்ந்து கொள்கை முடிவுகளை எடுக்கும் அளவுக்கு ஏற்றம் பெறுகின்றனர். மாநில அரசு கள் இத்தகைய கள அனுபவம் மிக்க மூத்த அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு அனுப்பி வைக்காவிட்டால் அது தேசத்துக்கே இழப்பாகிவிடும்” என்கிறார்.

தமிழகத்தின் நிர்வாக சாதனை

ஒரு காலத்தில் மிகத் தரமான அதிகாரிகளும் பொறாமைப் படத்தக்க நிர்வாக சாதனைகளும் நிறைந்த மாநிலம் தமிழகம். குஜராத் மாநில வளர்ச்சி மாதிரி பற்றிய இந்தத் தேர்தலில் ஆதரித்தும் எதிர்த்தும் அதிகம் பேசப்பட்டாலும் கல்வி, சுகாதாரம், சிசு மரணம் உள்ளிட்ட சமூகக் குறியீடுகளில் தமிழகம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றே பல அரங்குகளிலும் பாராட்டப் படுகிறது. அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் நல்லுறவு இல்லாமல் இத்தகைய சாதனைகள் நிகழ்ந்திருக்காது.

‘மிகுந்த திறமையும் வழக்கு களைப் புலனாய்வதில் நுணுக் கமும் உள்ளவர் அர்ச்சனா. அவர் சி.பி.ஐ.க்கு தலைமை தாங்க தகுதியானவர்’ என்கிறார் சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன். அப்படி நியமிக்கப்பட்டால் அவர்தான் சி.பி.ஐ.யின் முதல் பெண் தலை வராக இருப்பார். அர்ச்சனா அந்தப் பதவியை ஏற்பது அவருக்கு மட்டுமல்லாமல் தமிழகத்துக்கும் பெருமை தரக்கூடியதாக இருக்கும்.

மத்திய, மாநில அரசுகளின் மோதலுக்கு இடையில் சி.பி.ஐ. சிக்காமலிருக்க வழி என்ன என்று கேட்டபோது, “இதற்காக சட்டம் இயற்ற முடியாது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே சுமுகமான உறவு இருந்தால்போதும். இது போன்ற சர்ச்சைகளையும் காட்சி களையும் தவிர்த்துவிட முடியும்” என்கிறார் ராகவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x