Last Updated : 20 Jul, 2015 07:57 AM

 

Published : 20 Jul 2015 07:57 AM
Last Updated : 20 Jul 2015 07:57 AM

அன்பளிப்பு கேட்ட காரணத்தால் ஒரே ஆண்டில் 17 ஊழியர்கள் பணி நீக்கம்: சென்னை மண்டல அஞ்சல்துறை நடவடிக்கை

அன்பளிப்பு கேட்ட காரணத்தால் சென்னை நகர மண்டலத்தில் ஒரே ஆண்டில் 17 ஊழியர்களை பணி நீக்கம் செய்து அஞ்சல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீப காலமாக மணியார்டர், முதியோர் ஓய்வூதிய தொகை உள்ளிட்டவற்றை வழங்க பொது மக்களிடம் அஞ்சல் ஊழியர்கள் அன்பளிப்பு கேட்பதாக புகார்கள் எழுந்தன. சென்னை நகர மண்டலத்தில் இந்த புகார்கள் அதிகளவில் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில், 17 ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அவர்கள் 17 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலக்சாண்டர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஓய்வூதிய பணவிடை, மணியார்டர் உள்ளிட்ட சேவைகளை வழங்குகிற அஞ்சல் ஊழியர்கள் பொதுமக்களிடம் அன்பளிப்பு கேட்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இது தொடர்பாக அஞ்சல் துறையிடம் மட்டுமன்றி, மத்திய புலனாய்வுத்துறையிடமும் புகார் அளிக்கும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம் ஏராளமான புகார்கள் வந்தன. அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 17 ஊழியர்கள் லஞ்சம் பெற்றது உறுதியானதால் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x