Published : 09 May 2014 09:28 AM
Last Updated : 09 May 2014 09:28 AM

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி விண்ணப்பிக்க மே 18 கடைசி நாள்

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க மே 18-ம் தேதி கடைசி நாள் என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை பள்ளிகள் அல்லாத தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள தொடக்க வகுப்புகளில் 25 சதவீத இடங்களை நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களைக் கொண்டு நிரப்பப் பட வேண்டும் என்பதும், இவ்வாறு சேர வரும் மாணவர்களை சேர்த்துக்கொள்ள தனியார் பள்ளி கள் மறுக்கக்கூடாது மற்றும் அப்படி சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத் தும் என்பதும் அரசு விதியாகும்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் சிறுபான்மை பள்ளிகள் அல்லாத தனியார் பள்ளிகளில் 2014-15 கல்வியாண்டில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்கள் அந்தந்த தனியார் பள்ளிகள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம், காஞ்சிபுரம் கல்வி மாவட்ட அலுவலகம், செங்கல்பட்டு கல்வி மாவட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் கிடைக்கும். ப்ரீ கே.ஜி, எல்.கே.ஜி., 1-ம் வகுப்பு, 6-ம் வகுப்பு இவற்றில் எது சம்பந்தப்பட்ட பள்ளியில் தொடக்க வகுப்போ அதில் மட்டுமே சேர விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 18-ம் தேதிக்குள் மேற்கூறிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய சான்றுகள்

பள்ளியில் சேர உள்ள குழந்தையின் பிறப்புச் சான்று மற்றும் இருப்பிடச்சான்றாக அரசு ஏற்றுக்கொள்ளும் ஆவணங்களான குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்படும் இருப்பிடச் சான்று இவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க தகுதி

நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினராக இருக்க வேண்டும். தொடக்க வகுப்புகளில் சேர, விண்ணப்பிக்க இருக்கும் பள்ளியில் இருந்து 1 கி.மீ தொலைவுக்குள்ளும், இடை நிலை வகுப்பில் சேர 3 கி.மீ தொலைவுகுள்ளும் மாணவர்கள் வசிக்க வேண்டும். பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x