Published : 06 Jul 2015 02:51 PM
Last Updated : 06 Jul 2015 02:51 PM

இலங்கைச் சிறையில் ராமேசுவரம் மீனவர்கள் உண்ணாவிரதம்

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் வவுனியா சிறைச்சாலையில் திங்கட்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜீன்-1 அன்று கடலுக்குச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடித்தாகக் கூறி 3 விசைப்படகுகளை கைப்பற்றி அதிலிருந்து 14 ராமேசுவரம் மீனவர்களை சிறைப்பிடித்தனர்.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களின் காவல் கடந்த வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்ததைத் தொடர்ந்து மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நான்காவது முறையாக நீதிபதி ஆசிர்வாதம் அலேக்ஸ் ராஜா காவலை ஜுலை 17 வரையிலும் நீட்டித்து உத்திரவிட்டதைத் தொடர்ந்து மீனவர்கள் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் வவுனியா சிறையில் உள்ள 14 ராமேசுவரம் மீனவர்களும், சிறையில் அடைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் மத்திய, மாநில அரசுகள் தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி திங்கட்கிழமை உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து இந்திய-இலங்கை அப்பாவி மீனவர்கள் விடுதலை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் அருளானந்தம் கூறியதாவது, கடந்த வாரம் ரமலான் மாதத்தை முன்னிட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 113 இந்திய மீனவர்களையும், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 88 பாகிஸ்தான் மீனவர்களையும் இரு நாட்டு அரசுகளும் நல்லுறவு அடிப்படையில் பரஸ்பரம் விடுதலை செய்தனர்.

அதுபோல, இலங்கையின் யாழ்பாணம் மற்றும் வவுனியாச் சிறைச்சாலைகளில் உள்ள 40 தமிழக மீனவர்களையும், கடந்த மே 25-ல் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 5 பேர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்திய-இலங்கை இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரம் விடுதலை செய்ய வேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x