Published : 14 May 2014 12:48 PM
Last Updated : 14 May 2014 12:48 PM

நல்லக்கண்ணுக்கு அம்பேத்கர் சுடர் விருது: ஜூன் 15-ல் விடுதலைச் சிறுத்தைகள் வழங்குகிறது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படவுள்ளதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, கடந்த 2007ஆம் ஆண்டு முதல், பல்வேறு துறைகளில் தொண்டாற்றி வரும் சாதனையாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

குறிப்பாக, சமூக நீதிப் பாதுகாப்பு, சிறுபான்மையினர் நலன்கள், தாய்த்தமிழ்ப் பாதுகாப்பு மற்றும் இனநலன்கள் ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றிவரும் சான்றோரைத் தேர்வு செய்து இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்விழா ஆண்டுதோறும் அம்பேத்கர் பிறந்த நாளில் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு (2014) நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டதால் குறிப்பிட்ட நாளில் இவ்விழாவினை நடத்த இயலவில்லை. எனவே, வருகின்ற ஜூன் 15, 2014 அன்று சென்னையில் இவ்விழா நடைபெறுகிறது.

சென்னை, எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் நடைபெறவுள்ள இவ்விழா, 'புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, விருதுகள் வழங்கும் விழா மற்றும் அயோத்திதாசப் பண்டிதரின் நூற்றாண்டு நினைவு நாள்' என முப்பெரும் விழாவாக ஒருங்கிணைக்கப்படுகிறது.

விழாவில் விருது பெறும் சான்றோர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணிப் பொறுப்பாளர்கள் உரையாற்றுகின்றனர்.

2014ஆம் ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர் விவரம்:

அம்பேத்கர் சுடர் - ஆர்.நல்லக்கண்ணு

பெரியார் ஒளி - திருவாரூர் தங்கராசு (மறைவு)

அயோத்திதாசர் ஆதவன் - தி.பெ.கமலநாதன் (மறைவு)

காமராசர் கதிர் - எழுத்தாளர் கோபண்ணா

காயிதேமில்லத் பிறை - அ.மார்க்ஸ்

செம்மொழி ஞாயிறு - மணவை முஸ்தபா

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x