Published : 21 Jul 2015 10:00 PM
Last Updated : 21 Jul 2015 10:00 PM
தனுஷ்கோடி கடற்பகுதியில் ஜெல்லி மீன்கள் காணப்படுவதை தொடர்ந்து அங்கு கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனுஷ்கோடி கடற்கரை சுற்றுலாவிற்கு புகழ்பெற்று விளங்குகிறது. இந்தக் கடற்கரையை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்கள் என்றால் பயணிகளின் கூட்டம் இரண்டு மடங்காகி விடும்.
தனுஷ்கோடி கடல் அலைகளின் சுழல்கள் மிகவும் ஆபத்தானவை. மேலும் இதன் மணல் படுகைகள் , சகதி மற்றும் பாறைகள் மற்றும் ஆழமான பள்ளங்கள் அமைந்துள்ளதால் இங்கு குளிப்பவர்கள் நீரில் மூழ்கி இறக்கும் அபாயங்கள் அதிகமாக உள்ளன. இதனால் தனுஷ்கோடி, மூன்றாம் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆபத்தை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு வார காலமாக தனுஷ்கோடி கடற்கரைப் பகுதிகளில் ஜெல்லி மீன்களின் வரத்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இதுகுறித்து தனுஷ்கோடி மீனவர்கள் கூறியதாவது,
தனுஷ்கோடியின் கரையோரப் பகுதிகளில் ஜெல்லி மீன்கள் இனப் பெருக்கத்திற்காக வரத் துவங்கியுள்ளன. இதனால் தனுஷ்கோடி கடற்பகுதியின் கரையோரங்களில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை ஜெல்லி மீன்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
இறந்து போன ஜெல்லி மீன்களை மனிதர்கள் தொட்டால் கூட அரிப்பு ஏற்படும். அதே சமயம் அவைகள் மனிதனை தாக்கினால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஒவ்வாமையின் காரணமாக அதிகபட்சமாக மரணம் கூட நிகழாலாம்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடற்கரைப் பகுதிகளில் குளிக்க நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். மேலும், அறிவிப்புப் பலகைகளை அதிகப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, காவல்துறையினரும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT