Published : 13 Jul 2015 10:27 AM
Last Updated : 13 Jul 2015 10:27 AM

போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்ககோரி: ஏஐடியுசி சார்பில் நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவைத் தொகைகளை உடனே வழங்கக் கோரி ஏஐடியுசி சார்பில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு நாளை (ஜூலை 14) ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சம்மேளனத்தின் (ஏஐடியுசி) பொதுச் செயலாளர் ஜெ.லட்சுமணன் கூறும்போது, ‘‘12-வது ஊதிய ஒப்பந்தத்தை கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அரசு அலட்சியம் செய்ததால் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தின. இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதியன்று புதிய ஊதிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.

ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட விவகாரங்களில் நிதிப்பற்றாக்குறைக்கு தீர்வு காண முன்வராததால் ஏஐடியுசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கையெழுத்திடவில்லை. இருப்பினும் அரசும், கழக நிர்வாகங்களும் ஏற்றுக் கொண்டபடி ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்ற வில்லை. ஊதிய உயர்வு நிலுவைத் தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகைகள் இன்னும் வழங்கப்படாமல் உள்ளன.

எனவே, இந்த நிலுவை தொகைகளை உடனே வழங்க வேண்டும்; தினக்கூலி மற்றும் சேமநல ஓட்டுநர், சேமநல நடத்துநர்களுக்கு ஒப்பந்தப்படி தின ஊதியம் வழங்க வேண்டும்; விடுப்பு ஒப்படைப்பு சம்பளம் வழங்க வேண்டும்; ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பிஎப் பணம் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில் நாளை தமிழகம் முழுவதும் அனைத்து போக்குவரத்துக் கழக மண்டல தலைமை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x