

சென்னை மாநகராட்சியின் 1913 உதவி எண்ணில் தொடர்பு கொள்ளும்போது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் கட்டணத்தை மாநகராட்சி செலுத்த தயாராக உள்ளதாக ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு 1913 என்ற உதவி எண் சென்னை மாநகராட்சியால் தொடங்கப்பட்டது. இதில் மாநகராட்சி சம்பந்தப்பட்ட அனைத்து புகார்களையும் தெரிவிக்கலாம். குப்பை அகற்றுவது, தெரு விளக்குகள் அமைப்பது, சாலை பராமரிப்பு, தெரு நாய்கள் தொல்லை, கொசு அதிகரிப்பு, மரங்கள் வெட்டப்படுவது உள்ளிட்ட பல புகார்கள் இந்த எண்ணில் தினமும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
1913 என்ற எண் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமானது என்றுதான் மாநகராட்சி கூறி வந்தது. ஆனால் ஒரு சில சேவைகளை பயன்படுத்துவோர் மட்டுமே இதில் இலவசமாக தொடர்புகொள்ள முடிகிறது. ஏர்செல், ஏர்டெல் உள்ளிட்ட சேவையை பயன்படுத்துவோருக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த பிரச்சினை மாநகராட்சியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது. 1913 எண்ணில் தொடர்பு கொள்ளும்போது பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாநகராட்சி செலுத்த தயாராக இருப்பதாக மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:
1913 எண்ணில் தொடர்பு கொள்பவர்கள் சிலருக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது இதுவரை எங்கள் கவனத்துக்கு வரவில்லை. எதனால் இப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. 1913 இணைப்பு பிஎஸ்என்எல் மூலமாக மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்
ளது. பிற செல்பேசி சேவை நிறுவனங்களுடன் எங்களுக்கு நேரடி தொடர்பு கிடையாது. எனவே, பிற செல்பேசி சேவைகள் பொது மக்களிடம் பெறும் கட்டணத்தை மாநகராட்சி செலுத்த தயாராக இருப்பதாக பிஎஸ்என்எல் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போது அவர்களிடமிருந்து கட்டணத்தை வசூலிக்காமல் அதற்கான விவரங்களை அளித்தால், மாநகராட்சி அந்த தொகையை செலுத்தும். இது குறித்து பிஎஸ்என்எல் நிர்வாகம் அளிக்கும் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.