Published : 15 Jun 2015 07:47 AM
Last Updated : 15 Jun 2015 07:47 AM

பூண்டி ஏரியின் நீர் இருப்பு குறைகிறது

சென்னையின் குடிநீர் தேவைக்காக பூண்டி ஏரியிலிருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறந்து விடப்படுவதால் பூண்டி ஏரியின் நீர் இருப்பு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு-கங்கை ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் கண்டலேறு அணையிலிருந்து, ஆந்திர அரசு, கிருஷ்ணா நதி நீரை திறந்து விடுகிறது. அந்த வகையில் கடந்த 1-ம் தேதி முதல் திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர், கடந்த 4-ம் தேதி தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம்- தாமரைக்குப்பத்தில் உள்ள ஜீரோ பாயிண்ட்டை அடைந்தது.

கிருஷ்ணா நீர், கடந்த 5-ம் தேதி முதல் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 174 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில், சென்னையின் குடிநீர் தேவைக்காக பேபி கால்வாய் மூலம் வினாடிக்கு 15 கன அடி நீர் புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி முதல், வினாடிக்கு 150 கன அடி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அனுப்பப்படுகிறது.

இதனால் பூண்டி ஏரியின் நீர் இருப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர் இருப்பு 172 மில்லியன் கன அடியாக இருந்ததாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x