

நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி ஜூலை 2-ம் தேதி மாநில அளவில் 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்துத் துறை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருச்சி மன்னார்புரத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அரசின் ஒவ்வொரு துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்து அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளிடம், சங்கத் தலைவர் ஆர்.தமிழ்செல்வி கருத்துகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. காலிப் பணியி டங்களுக்கு பணியாளர்கள் நிரப்பப்படாததால், பணியிலிருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. ஆனால், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து நிலுவையிலேயே உள்ளன.
நிலுவையில் உள்ள கோரிக்கைள் குறித்து, அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 2-ம் தேதி மாநில அளவில் 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, ஜூலை 22-ல் மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கை விளக்கப் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து செப்டம்பர் 2-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஆகஸ்ட் 22-ம் தேதி வேலைநிறுத்த ஆயத்த மாநாடும், ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை வேலைநிறுத்தப் பிரச்சார நடைபயணமும் நடைபெறும் என்றார்.